பெண் ஊழியரை கற்பழித்த ஸ்டுடியோ அதிபர் !! அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட பெண் !!

By Selvanayagam PFirst Published Dec 5, 2019, 9:02 AM IST
Highlights

புதுவையில் ஸ்டுடியோ அதிபர் கற்பழித்ததால் பெண் ஊழியர் தீக்குளித்ததில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
 

அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாரதிதாசன் நகர் வீதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி இவருக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கடைசி மகள் தனலட்சுமி.  பிளஸ்-2 படித்திருந்த இவர் புதுவை சின்னக்கடை காந்தி வீதியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தனலட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிச்சயிக்கப்பட்டது. நேற்று வீட்டில் இருந்து தனலட்சுமி திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
முன்னதாக மருத்துவமனையில் சேர்த்ததும் புதுவை நீதிபதி சிவக்குமார் அவரிடம் வாக்குமூலம் பெற்றார். அப்போது அவர் தீக்குளிப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து நீதிபதியிடம் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறினார்.

தனலட்சுமி வேலை பார்த்து வந்த ஸ்டுடியோவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மதுர என்பவர் நடத்தி வந்தார். அவர் கடந்த ஜனவரி மாதம் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து என்னை கற்பழித்துவிட்டார். இதனால் தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டேன் என்று தனலட்சுமி வாக்குமூலத்தில் கூறினார்.

இதுபற்றி முன்கூட்டியே ஏன் புகார் கொடுக்கவில்லை என்று போலீசார் அவரிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், மதுரவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நான் புகார் கொடுத்தால் அவருடைய குடும்பம் நாசமாகிவிடும் என்பதால் அப்போதே புகார் கொடுக்கவில்லை என்றார்.

கற்பழிப்புக்கு ஆளான நான் இன்னொருவரை திருமணம் செய்து அவருக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. எனவே தான் உயிரை மாய்த்துக்கொள்ள தீக்குளித்தேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் மதுர மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த தகவல் தெரிந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை தேடிவருகிறார்கள்.

click me!