பாழடைந்த இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கொலையில் முடிந்த பேஸ்புக் நட்பு!!

By Asianet TamilFirst Published Aug 29, 2019, 6:26 PM IST
Highlights

தெலுங்கானா மாநிலத்தில் பேஸ்புக் மூலம் பழக்கமான நண்பரை காணச் சென்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 

தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகரைச் சேர்ந்தவர் சுஜாதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். பேஸ்புக் என்கிற சமூக வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்தும் இந்த சிறுமிக்கும் நவீன் ரெட்டி என்கிற வாலிபருக்கு அதன் மூலம் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

தினமும் பேஸ்புக் வழியாக பேசிக்கொண்டிருந்த அவர்கள் இருவரும் நாளடைவில் நெருங்கிய நண்பர்களாக பழகியுள்ளனர். இந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து பேசலாம் என முடிவு செய்திருக்கின்றனர்.

அதன்படி கடந்த 27 ம் தேதி மெகபூப் நகரின் அருகில் இருக்கும் சங்கராயப்பள்ளி குடியிருப்புக்கு அருகில் இருக்கும் பாழடைந்த இடத்திற்கு அந்த சிறுமியை நவீன் ரெட்டி அழைத்துச் சென்றிருக்கிறார்.

முதலில் நன்றாக பேசிக்கொண்டிருந்த நவீன் ரெட்டி, திடீரென சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரை எச்சரித்திருக்கிறார். ஆனாலும் அதை பொருட்படுத்தாத நவீன் ரெட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். அவரை தடுக்க முயன்ற சிறுமியை ஆத்திரத்தில் நவீன் ரெட்டி கீழே தள்ளி இருக்கிறார்.

கீழே விழுந்த சிறுமியின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வந்திருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அதைப் பார்த்த நவீன் ரெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனிடையே மகளை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்தனர் சிறுமியின் பெற்றோர். புகாரின் அடிப்படையில் அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர் போலீசார். அதில் சிறுமி நவீன் ரெட்டியுடன் சென்றது தெரிய வந்தது.

இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய நவீன், ஒரு கட்டத்தில் சிறுமியை கொலை செய்ததை கூறினார். அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு சென்று சிறுமியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பேஸ்புக் நண்பனை நம்பி பார்க்க சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!