கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 214 பேர் பலி... நான்காவது அலை தொடங்கிடுச்சா?

By Kevin KaarkiFirst Published Apr 18, 2022, 10:57 AM IST
Highlights

கேரளாவை தொடர்ந்து டெல்லியில் 517 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியில் வைரஸ் தொற்று 12 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் கேரளா மாநிலத்தில் அதிகபட்சமாக 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களில் ஏற்பட்ட புதிய பாதிப்புகள் விவரங்களை அரசு வெளியிடவில்லை. இதன் காரணமாக மத்திய சுகாதரத்துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் புதிய பாதிப்புகள் மொத்தமாக சேர்க்கப்பட்டுள்ளன.

2 ஆயிரம்  பேருக்கு கொரோனா:

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை ஆயிரத்திலேயே இருந்து வந்தது. இன்று இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. கேரளாவை தொடர்ந்து டெல்லியில் 517 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியில் வைரஸ் தொற்று 12 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.

தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து டெல்லியில் மீண்டும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி அம்மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதில் சுகாதர துறை மற்றும் மருத்துவ துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

மொத்த பாதிப்பு:

இதன் மூலம் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 280 ஆக அதிகரித்து உள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்தியாவில் 214 பேர் கொரோனா வைரஸ் தொற்று மூலம் உயிரிழந்துள்ளனர். இதில் 213 உயிரிழப்புகள் கேரளா மாநிலத்தில் மட்டும் பதிவாகி இருக்கிறது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 965 ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனாவில் இருந்து 1,985 பேர் மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 10 ஆயிரத்து 773 ஆக அதிகரித்து உள்ளது.

நான்காவது அலை:

கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 542 ஆக சரிந்துள்ளது. அந்த வகையில் நேற்றைக்கு முந்தைய தினத்துடன் ஒப்பிடும் போது நேற்று பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் எண்ணிக்கை 16 குறைவு ஆகும்.  

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு, உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்தியாவில் நான்காவது அலை தொடங்கி விட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது. 

click me!