இனி வீடியோ எதுக்குங்க? கூவத்தூரை படமாவே எடுத்துட்டாங்க!! ‘நோட்டா’ விமர்சனம்..

By sathish kFirst Published Oct 5, 2018, 3:24 PM IST
Highlights

கூவத்தூர் கும்மாளங்கள் தொடங்கி, செம்பரம்பாக்கம் ஏரி வழியாக சசிகலா, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்,தினகரன் முதுகில் ஏறி, அப்பல்லோ சி.சி.டி.வி. ஃபுட்டேஜ்களை டெலிட் செய்து, கண்டெய்னர் பணம், சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு கழுத்தறுப்புகள்  வரை தமிழக அரசியலை தரைமட்டத்துக்கு கிழித்துத் தொங்கவிட ஒரு படம் வந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்தானே?

கூவத்தூர் கும்மாளங்கள் தொடங்கி, செம்பரம்பாக்கம் ஏரி வழியாக சசிகலா, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்,தினகரன் முதுகில் ஏறி, அப்பல்லோ சி.சி.டி.வி. ஃபுட்டேஜ்களை டெலிட் செய்து, கண்டெய்னர் பணம், சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு கழுத்தறுப்புகள்  வரை தமிழக அரசியலை தரைமட்டத்துக்கு கிழித்துத் தொங்கவிட ஒரு படம் வந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்தானே?

ஆனால் நீண்ட நாட்களுக்கு தமிழில் முழு நீள அரசியல் படமாக வந்திருக்கும் ‘நோட்டா’ அதை கனகச்சிதமாக செய்திருக்கிறது.

ஹீரோ முதல்வர் நிறைய கெட்டவார்த்தை பேசுகிற கேரக்டர் என்பதால் அந்த சவுண்டுகளை மட்டும் மியூட் செய்துவிட்டு, தமிழக அரசியலின் இன்றைய அச்சு அசல் போக்குகளைக்காட்ட அப்படியே அனுமதித்த சென்சாருக்கு ஒரு ஒற்றை ரோசா பார்சேல்.

கதைக்கு வருவோம்.

முதல்வர் நாசரின் மகனான ஹீரோ விஜய் தேவரகொண்டா ஒரு அரசியல்வாதியின் பிள்ளைக்கு இருக்கவேண்டிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய மொடாக்குடிகார ப்ளேபாய். எதிர்பாராமல் நாசர் மீது ஊழல் வழக்கு வந்து அவர் பெங்களூரு பார்ப்பன அக்ரஹார ஸாரி திகார் ஜெயிலுக்குப் போக, அவசர அவசரமாக விஜய் முதல்வராக்கப்படுகிறார்.

வேறு வழியின்றி முதல்வராகும்  விஜய் ஆளுங்கட்சிக்காரர்கள் செய்யும் அட்டூழியங்களைத் தடுக்க முயல்கிறார். அப்பாவின் பெயரில்20000 கோடிக்கு சொத்து இருப்பதும், அது பினாமி பெயர்களில் வெளிநாட்டில் இருப்பதும் கண்டு அதிர்ந்து அதைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்குகையில், அதற்குப்பின்னால் கொக்கி ராசுதேவ் மாதிரி ஒரு கேடி சாமியார் இருப்பது தெரிகிறது.

இதற்கு மேல் கதையைச் சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் போய்விடும்.

ஷான் கருப்பசாமியின் கதையை, இதற்கு முன் ‘அரிமா நம்பி’ இருமுகன்’ ஆகிய இரு தரமான ஃப்ளாப்புகளைத் தந்த, ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கிறார். கொட்டிக்கிடக்குது ஊரளவு. அதில் வெட்டி எடுத்தது ஓரளவு என்கிறமாதிரி  தமிழக அரசியலில் நடந்த ஒரு சில சுவாரசியமான துணிச்சலாக சொல்லமுயன்ற ஒரு காரணத்துக்காகவே இம்முறை வெற்றிப்பட இயக்குநராகிவிட்டார்.

அதிலும் பக்கி சாமியார் பக்தைகளுடன் பஜனைப் பாடல் பாடிக்கொண்டே மலைநிலங்களை ஆட்டயப் போட்டது. அரசியல்வாதிகளின் கருப்புப் பணத்தைக் கண்கொத்திப்பாம்பாய் காத்து களவாட நினைப்பது என்று காவி அரசியலைத் தோலுரிக்க ஒரு துணிச்சல் வேண்டும். உங்களுக்கு டைம் நன்றாக இருந்தால் ஹெச்.ராஜாக்களும், தமிழிசைகளும் வசைபாடி படத்தின் வசூலை உயர்த்தக்கூடும்.

ஹீரோ விஜய் தேவரகொண்டா சொந்தக்குரலில் சுமாராகப் பேசி, நடிப்பில் சிறப்பாக சோபித்திருக்கிறார்.

சத்யராஜும் நாசரும் வழக்கம் போல். விபத்திற்குப்பின்னர் நாசருக்கு மூக்கில் அவ்வளவு அடிபட்டதாகக் காட்டிக் குரூர மேக் அப் போட்டிருப்பதைத் தவித்து காது, கழுத்து பகுதிகளில் கைவண்ணத்தைக் காட்டியிருக்கலாம்.

இசை சாம்.சி.எஸ். ஒளிப்பதிவு சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன், எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிரிஷ்டா. இந்தக் கதையில் கதையைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தத்தேவையில்லை. குறிப்பாக டெக்னிக்கல் மெனக்கெடல் தேவையில்லை என்று இயக்குநர் உறுதியாக இருந்திருப்பார் போலும். அதனால் ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கான தொழில்நுட்ப நேர்த்தி படம் முழுக்கவே மிஸ்ஸிங்.

ஆனால் சுடச்சுட ஒரு அரசியல் பத்திரிகை வாசித்த உணர்வை படம் நிச்சயம் தருகிறது.

click me!