
தேசிய தேர்வு முகமை (NTA), டிசம்பர் 2025-ல் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) UGC NET தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை (Provisional Answer Key) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இத்தேர்வை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் இப்போது தங்கள் விடைகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான நேரடி இணைப்பு மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் முறைகள் குறித்து இங்கே காண்போம்.
தேர்வர்கள் csirnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விடைக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்யலாம். முகப்புப் பக்கத்தில் உள்ள லிங்கை கிளிக் செய்து, உங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) உள்ளிட்டு லாகின் செய்வதன் மூலம் விடைக்குறிப்பு மற்றும் உங்கள் ரெஸ்பான்ஸ் ஷீட்டை (Recorded Response Sheet) பார்க்க முடியும்.
வெளியிடப்பட்டுள்ள விடைகளில் ஏதேனும் தவறு இருப்பதாகத் தேர்வர்கள் கருதினால், அதற்கு ஆட்சேபனை (Challenge) தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
• கடைசி தேதி: ஜனவரி 1, 2026 இரவு 11 மணி வரை.
• இதற்குப் பிறகு வரும் எந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று NTA திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள், ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.200 செயலாக்கக் கட்டணமாக (Processing Fee) செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது (Non-refundable). கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ (UPI) மூலமாக ஆன்லைனில் மட்டுமே பணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாத ஆட்சேபனைகள் நிராகரிக்கப்படும்.
2 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்
CSIR UGC NET டிசம்பர் 2025 தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 2,12,552 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கான கணினி வழித் தேர்வு (CBT Mode) கடந்த டிசம்பர் 18, 2025 அன்று பல்வேறு மையங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்து என்ன நடக்கும்?
தேர்வர்களிடமிருந்து பெறப்படும் ஆட்சேபனைகளைத் துறை சார்ந்த வல்லுநர் குழு ஆய்வு செய்யும். அவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனை சரியானது என்று கண்டறியப்பட்டால், விடைக்குறிப்பில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்துத் தேர்வர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும். இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்பின் (Final Answer Key) அடிப்படையில் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் யாருக்கும் பதில் அளிக்கப்படாது என்று NTA அறிவித்துள்ளது.