
சாம்சங் ‘கேலக்சி நோட்-7’ ஸ்மார்ட்போன் பேட்டரி வெடித்து, தீப்பிடித்த விவகாரத்தைத் தொடர்ந்து, அந்த ரக ஸ்மார்ட்போன் உற்பத்தி, விற்பனையை உலகம் முழுவதும் நிறுத்திவிட்டதாக சாம்சங் நிறுவனம் நேற்று அறிவித்தது.
அதுமட்டுமல்லாமல் , உலகம் முழுவதும் உள்ள விற்பனையாளர்கள் இந்த கேலக்சி நோட்-7 ரக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனடியாக ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் கேலக்சி வரிசையில் ‘நோட்-7’ எனும் ஸ்மார்ட் போனை தயாரித்து சந்தையில் வெளியிட்டது. இந்த ரக ஸ்மார்ட்போனின் லித்தியம் அயர்ன் பேட்டரி திடீரென்று வெடித்து தீப்பிடித்த சம்பவங்கள் உலகில் பல நாடுகளில் நடக்கத் தொடங்கின. இது தொடர்பாக புகார்களும் சாம்சங் நிறுவனத்துக்குச் சென்றது.
இதனால், கேலக்சி நோட்-7 ரக ஸ்மார்ட்போனை விமானப் பயணத்தில் பயன்படுத்தக்கூடாது என்று ஏர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் சர்வதேச விமானங்களும் தடை செய்தன.
இதனால், அதிர்ச்சியடைந்த சாம்சங் நிறுவனம் உலகம்முழுவதும் கேலக்சி நோட்-7 ரக ஸ்மார்ட் போனை திரும்பப் பெறப்போவதாக அறிவித்தது. மேலும், அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பும், நோட்-7 ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்தது. மேலும், இந்த ரக போன்களைதிரும்பப்பெற சாம்சங் நிறுவனம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் ஒருவர் கேலக்சி நோட்-7 போனை சார்ஜ் செய்தபோது அந்த போன் வெடித்துச் சிதறியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்சங் நிறுவனம் உலகம் முழுவதும் கேலக்சி நோட்-7 ரக ஸ்மார்ட்போன் உற்பத்தியையும், விற்பனையையும் நிறுத்துவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை வெளியிட்டது. நுகர்வோர் பாதுகாப்பை எங்களின் உச்சபட்ச முன்னுரிமை எனவும் தெரிவித்தது.
உலகத்தில் உள்ள 10 முக்கிய சந்தைகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ள 25 லட்சம் ஸ்மார்ட் போன்களை திரும்பப் பெறுவதாகவும், இந்த ரக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனடியாக ‘ஸ்விச் ஆப்’ செய்யும் படியும் சாம்சங் நிறுவனம் கேட்டுக்கொண்டது.
இந்த கேலக்சிநோட்-7 ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள சாம்சங் ஷேரூமில் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படியும், அல்லது வேறு ரக ஸ்மார்ட் போனை பெற்றுக் கொள்ளும் படியும் தெரிவித்துள்ளது. மேலும், வர்த்தக நிறுவனங்கள் நோட்-7 ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டது.
சாம்சங் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் நிறுவனத்தில் பங்குகள் 8.0 சதவீதம் சரிவடைந்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.