petrol diesel price today:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 5 டாலர் குறைந்துவிட்ட நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 9-வது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 5 டாலர் குறைந்துவிட்ட நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 9-வது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
9-வது முறை
பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 80 காசுகளை எண்ணெய் நிறுவனங்கள் இன்று உயர்த்தியுள்ளன. கடந்த 10 நாட்களில் இதுவரை பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.6.40 காசுகள் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் விலை
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81 ஆகவும், டீசல் விலை ரூ.93.07ஆகவும் விலை உயர்ந்துள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.116.72ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.100.94 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லி்ட்டர் ரூ.107.45 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.97.52 ஆகவம் அதிகரித்துள்ளது
கடந்த 22ம் தேதி முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை.
கச்சா எண்ணெய் விலை குறைவு
இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப விலையை ஏற்றாததால், ரூ.19ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இழப்பை ஈடு செய்ய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.20வரை உயர்த்த வேண்டும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று பேரல்ஒன்றுக்கு 5 டாலர் சரிந்து 108 டாலராகக் குறைந்துவிட்டது. பிரன்ட் கச்சா எண்ணெய் 108டாலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் 102 டாலராகவும், ஒபேக் பேஸ்கட் 3.34 டாலர் சரிந்து 110 டாலராகவும் இருக்கிறது
கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையிலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர குடும்பத்தினர், சாமானிய மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயரும், அந்த விலை ஏற்றம் பொருட்கள் மீது திணிக்கப்பட்டு, நுகர்வோர் தலையில்தான் இறுதியாக விழும்.