
தங்கம் விலையில் இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்றம் காணப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் பெரிய மாற்றம் காணப்படவில்லை என்றாலும், முதலீட்டாளர்கள் உலோக பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியதால், கமாடிட்டி மார்கெட் நல்ல லாபத்தை கொடுத்தன.நிலையான லாபத்தை விரும்பும் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களில் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்றத்தில் காணப்படுகிறது.
முகூர்த்த நாட்கள்
சர்வதேச சந்தையின் தாக்கம் மற்றும் அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் முகூர்த்த நாட்கள் தொடங்குவதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் இருந்தாலும், தங்கத்திற்கு அடுத்தப்படியாக நடுத்தர வர்க்கத்தினர் வெள்ளியை தேர்வு செய்து வருகின்றனர்.
தங்கம் விலை மீண்டும் உச்சம்
சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை ஏப்ரல் 22 ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 15-ந் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை மதுரை, கோவை மற்றும் நெல்லையில் ஒரு கிராம் 9 ஆயிரத்து 130 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச காரணங்கள்
சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தை வாங்க தொடங்கியதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் உலோகங்களில் முதலீடுகளை அதிகரித்து தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
உள்நாட்டு காரணம்
ஆனி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகமாக உள்ளதால், திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் ஆபரணங்களை வாங்க தொடங்கியுள்ளதால் உள்ளூர் சந்தைகளில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் தாக்கமும் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணம் என முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.