
உலக பொருளாதார காரணங்களால் ஆபரணத்தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. முகூர்த்த நாட்கள் தொடங்கவுள்ள நிலையில் இந்த விலை ஏற்றம் அடித்தட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. விலை குறையும் எதிர்பார்த்து காத்திருந்தவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 995 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹71 ஆயிரத்து 960க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் மதுரை, கோயம்புத்தூர், நெல்லையில் ஒரு கிரா தங்கம் விலை 8,995 ரூபாயாக உள்ளது. திருமண நாட்கள் தொடங்குவதற்கு முன்பாகவே தங்கம் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது நடுத்தர மக்களை பாதித்துள்ளது. அதேபோல் வெள்ளி மாற்றம் இல்லாமல் 1 கிராம் 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிகரித்து வரும் அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால் பங்குச் சந்தைகள் போன்ற ஆபத்து அதிகம் நிறைந்த சொத்துகளில் முதலீடு செய்வது குறித்து முடிவுகளில் முதலீட்டாளர்கள் தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிக்க தொடங்கியுளதாகவும் இதன் காரணமாக விலை உயர்வதாகவும் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தை வாங்க தொடங்கியதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் உலோகங்களில் முதலீடுகளை அதிகப்படுத்தி வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவையும் தங்கத்தின் சென்டிமென்டையும் பிரிக்கவே முடியாது என கூறும் சந்தை நிபுணர்கள், தங்கத்தின் விலை உயர்வை பொதுமக்கள் பெரிதுபடுத்த தேவையில்லை எனவும் காத்திருந்து வாங்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். முதலீட்டுக்காக அல்லாமல் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு நகைகளை வாங்குவோரும் வரா இறுதிவரை காத்திருக்கலாம் எனவும் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜுலாணி தெரிவித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.