இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட முலாம்பழம் சாகுபடி முறை…

Asianet News Tamil  
Published : Mar 22, 2017, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட முலாம்பழம் சாகுபடி முறை…

சுருக்கம்

With the scents and tastes of sweet melon cultivation system

முலாம்பழம்

இது இனிப்பு சுவையும், நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிர். வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் கொண்டது.

முதிர்ச்சி அடையாத முலாம்பழம் – சமைப்பதற்கும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழங்கள் இனிப்பாக இருக்கும். பதப்படுத்தி ஜாம், ஜெல்லி தயாரிக்கலாம். இப்பழம் நீளம், உருண்டை, முட்டை வடிவத்தில் இருக்கும்.

சாகுபடி நுட்பங்கள்:

நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான மண் ஏற்றது. 6 – 7.5 அமில காரத் தன்மையுள்ள மண்ணில் நன்கு வளரும்.

முலாம்பழம் நன்கு வளர்வதற்கு அதிக சூரிய ஒளி, குறைவான ஈரப்பதம், உறைபனி இல்லாத மிதமான வறண்ட சூழ்நிலையும் தேவை.

ரகங்கள்:

அர்கா ராஜ்கான்ஸ், அர்கா ஜீட், பூசா சர்பதி, பூசா மதுரகஸ், பஞ்சாப் சன், துர்காபுரா மாது, ஜாப்நா 96-2 மற்றும் பஞ்சாப் ரசிலாஹெரி.

அர்க்கா ராஜ்கான்ஸ் ரகம் உருண்டை வடிவமுள்ள காய்களைக் கொண்டது. காய்களின் மேற்பரப்பில் வலைகள் நன்றாக தெரியும். இவை வெள்ளை நிறத்திலும் அதிக அளவு சதைப்பிடிப்பும் கொண்டிருக்கும். இனிப்பு சுவையுடைய இவை ஒரு எக்டருக்கு 30-40 டன் வரை மகசூல் கொடுக்கும். சராசரியாக ஒரு காயின் எடை 1.0 முதல் 1.5 கிலோ வரை இருக்கும்.

பருவம்:    

முலாம்பழம் டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் விதை விதைத்தால் கோடை காலத்திற்கு இவை விளைச்சலைக் கொடுக்கும். மானாவாரிப் பயிராக ஜூன் மாதத்திலும் விதைக்கலாம்.

விதைப்பு:

நிலத்தை 3-4 முறை உழுது எக்டருக்கு 50 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு நிலத்தை பண்படுத்த வேண்டும். பின் 2 அடி (60 செ.மீ) அகலத்திற்கு நீளமான வாய்க்கால்களை 2 மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும்.

வாய்க்கால்களின் பக்கவாட்டில் 45 x 45 x 45 செ.மீ. அளவுள்ள குழிகளை ஒரு மீட்டர் இடைவெளியில் தோண்டி உரங்களைப் போட்டு மண்ணுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

ஒரு எக்டருக்கு தேவையான மூன்றரை கிலோ விதையுடன் 4 கிராம் / கிலோ விதை என்ற அளவில் சூடோமோனாஸ் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் சேர்த்து நன்கு கலக்கி விதைநேர்த்தி செய்ய வேண்டும். குழிகளின் மத்தியில் விதைகளை விதைத்து 15 நாட்கள் கழித்து குழிக்கு 2 நாற்றுக்களை மட்டும் விட்டு மீதியை நீக்கிவிட வேண்டும். விதை விதைப்பதற்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும். நட்ட மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

களை நீக்கம்:

விதை விதைத்ததில்இருந்து 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பொதுவாக 3 முறை களை எடுக்க வேண்டும்.

உர மேலாண்மை:

55 கிலோ மணிச்சத்து, 55 கிலோ சாம்பல்சத்து என்ற அளவில் அடியுரமாக இடவேண்டும். நட்ட 50 நாட்கள் கழித்து 55 கிலோ தழைச்சத்து மேலுரமாக இடவேண்டும்.

வினையூக்கி அளித்தல்:

10 லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் எத்ரலை நன்கு கலக்கி விதைத்த 15 நாட்கள் கழித்தும் பின் வாரம் ஒரு முறையும் 4 வாரங்களுக்கு செடியின் மீது தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

இலை வண்டுகளைக் கட்டுப்படுத்த லிட்டருக்கு 1 மிலி மாலத்தியான் அல்லது 1 லிட்டருக்கு 2 கிராம் கார்பரில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்துவிட வேண்டும்.

நிலத்தை நன்கு உழுது கூட்டுப்புழுக்களை சூரிய ஒளியில் நன்கு படுமாறு செய்து அவை அழிக்கப்பட வேண்டும்.

அறுவடை: 

காய்களின் மேற்பரப்பிலுள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாகவும் மாறும்போது அறுவடை செய்ய வேண்டும்.

ஒரு எக்டருக்கு 20-30 டன் விளைச்சல் 120 நாட்களில் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!
Training: கோடிகளை ஈட்டலாம் ஈசியா.! பழங்களை இனி வீணாக்க வேண்டாம்! மதிப்பு கூட்டி லாபம் ஈட்டும் கலை இதோ.!