
** பால் கறக்கும் வேளையில் தொழுவத்தை சுத்தப்படுத்துவதோ, வைக்கோல் இடவோ கூடாது. பால் கறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தொழுவத்தைக் கழுவி விட வேண்டும்.
** தொழுவம் சுத்தமாக இருந்தால் ஈ மற்றும் கொசுக்களினால் பரவக்கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் பாலை கெட்டுப் போகச் செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும். அதனால் கால்நடைகளின் மடி, காம்புகள், தொடை, தொடை இடுக்குகள் மற்றும் வாயில் ஒட்டிக் கொண்டிருக்கும் சாணத்தை நன்றாக கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
** கறவை மாடுகளை சுத்தம் செய்த பின்னர் தகுந்த கிருமி நாசினி கொண்டு மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும். பின்பு தூய்மையான துணி கொண்டு மடிகளையும், காம்புகளையும் துடைத்து விட வேண்டும். அவ்வாறு செய்வதால் பாலில் நுண்ணுயிரிகளின் சேர்க்கை வெகுவாக குறைந்துவிடும்.
** பால் கறக்கும் பாத்திரங்களை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி பின்னர் 200 மி.கிராம் பிளீச்சிங் பவுடரை ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் கொண்டு தயாரிக்கப்பட்ட திரவத்தால் நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தி பின்பு பால் கறக்கப் பயன்படுத்துதல் மிகவும் அவசியமாகும். இவ்வாறு செய்வதன் மூலம் பாத்திரங்களில் உள்ள பாலும் தூய்மையாக இருக்கும்.
** பால் கறப்பவர்கள் எந்தவித நோயின் அறிகுறிகளும் இல்லாமல் இருக்க வேண்டும். பால் கறக்கும்போது புகை பிடிப்பதோ, எச்சில் துப்புவதோ, இருமுவதோ கண்டிப்பாக கூடாது. விரல் நகங்கள் வெட்டப்பட்டு பால் கறக்கும் முன் கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவி துணி கொண்டு துடைத்த பின்னரே பால் கறக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பால் கறப்பவர்களின் மூலமாக பாலுக்குள் செல்லும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைகிறது.
** பால் கறக்கும்போது எல்லா காம்புகளிலும் உள்ள முதல் பாலை தரையில் பீய்ச்சி விட்டு பின்னர் பால் கறக்கும் பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எதிர்பாராதவிதமாக பால் காம்புகளில் நுழைந்துள்ள கிருமிகள் பாலில் சேராமல் தடுக்கப்படுகின்றது.
** பால் கறக்கும்போது சில கறவை மாடுகள் வாலை வீசும் தன்மை கொண்டவைகளாக இருக்கும். அப்போது வாலை தொடை இடுக்கில் சிக்க வைத்து விட்டால் தொந்தரவுகள் இல்லாமல் பால் கறக்க முடியும்.
** கறந்த பாலை உடனடியாக 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அல்லது அதற்குக் குறைந்த வெப்பநிலைக்கு குளிர வைக்க வேண்டும். அப்படிச் செய்வதால் பாலில் உள்ள நுண்ணுயிரிகள் மேலும் வளராமல் தடுக்கப்படுகின்றன. இல்லையெனில் பால் விரைவில் கெட்டுப் போய்விடும்.
** பால் கறக்கும் பாத்திரமானது மேலே வாய் குறுகியும், கீழே அகன்றும் உள்ள எவர்சில்வர் மற்றும் அலுமினியத்தாலான பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். அப்படி இருந்தால் காற்றினால் பாலுக்குள் சேரும் நுண்ணுயிரிகள் தடுக்கப் படுகின்றன.
** பால் கறக்கும் இடத்தை வாரத்திற்கு இரு முறை தகுந்த கிருமி நாசினிகள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு சுத்தப்படுத்துவதன் மூலம் பால் கறக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம்.
** பால் கறந்தவுடன் உடனடியாக சுத்தமான, மெல்லிய, உலர்ந்த துணி கொண்டு வடிகட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் பாலில் சேர்ந்த தூசி, முடி ஆகியவை நீக்கப்பட்டுவிடும்.
** பால் கறவை இயந்திரம் உபயோகிப்போர் இயந்திரத்தின் மடி கறவைப் பகுதியை தினசரி சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும்.