அதிக இலாபம் தரும் அவரை…

First Published Dec 9, 2016, 12:46 PM IST
Highlights


தண்ணீர் பற்றாக்குறையை ஈடு செய்து, அவரையைப் பயிர் செய்து லாபம் ஈட்டும் வழிமுறைகளை கூறும், SCAD வேளாண் அறிவியல் மையத்தின் தலைமை அதிகாரிகளான பாபு மற்றும் அமலி கூறுகிறார்:

துாத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில், பெரும்பாலும் மானாவாரிப் பயிராக, பருத்தி, சூரியகாந்தி, மக்காச்சோளம், பயறு வகைகள் மற்றும் சிறு தானியங்களை, விவசாயிகள் பயிரிடுவர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நிலவும் வறட்சி மற்றும் பருவ நிலை மாற்றங்களால், குறைந்த தண்ணீரே தேவைப்படும் மானாவாரிப் பயிர்களைக் கூட, பயிர் செய்ய முடியாமல் தவித்தனர்.

அதற்குத் தீர்வு காணும் விதமாக, கடும் வறட்சி மற்றும் குறைந்த நீரில் வளரக்கூடிய குறுகிய காலத்தில் அறுவடைக்குத் தயாராகும் அவரைக்காயை பயிர் செய்யலாம் எனக் கூறினோம்.

அதன்படி, ‘கோ14’ என்ற அவரை வகையை மாதிரியாக, ஐந்து விவசாயிகளின் நிலத்தில் பயிர் செய்யுமாறு, கடந்த ஆண்டு அறிவுறுத்தினோம். அதன் மூலம் விவசாயிகள், குறைந்த செலவில் அதிக லாபத்தைப் பெற்றனர்.நல்ல மகசூல் எடுத்ததைத் தொடர்ந்து, இதே முறையைப் பின்பற்றி மற்ற விவசாயிகளும் எதிர்வரும் பருவத்தில், அவரை பயிர் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு, நிலத்தை நன்றாக உழுது எரு அடித்து, மீண்டும் உழுது கொள்ள வேண்டும்.

பின், குறு செடி வகையான, ‘கோ14’ ரக அவரை விதைகளை வரிக்கு, 45 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்து செடிக்கு செடி, 30 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும்.

விதைப்புக்கு முன், ரைசோபியம் கலவையில் விதை நேர்த்தி செய்த பின், விதைக்க வேண்டும்.

அவரையில் இருக்கும் பெரிய பிரச்னையே, காய் துளைப்பான் நோய் தான். இதை கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

விதைத்த, 52வது நாளில் இருந்து காய்கள் பறிக்கத் துவங்கலாம். தொடர்ச்சியாக, 90வது நாள் வரை நான்கு நாட்களுக்கு ஒருமுறை என, காய்களை பறிக்கலாம். 20 ஆயிரம் ரூபாய் செலவிடுவதன் மூலம், 90 நாட்களில் அதிகபட்சமாக, 90 ஆயிரம் ரூபாய் வரை வருமானம்  ஈட்டலாம்.

அவரைக்காய், நம் சமையலில் முக்கியப் பயிராக இருப்பதால், சந்தையில் இதற்கு எப்போதுமே, ‘டிமாண்ட்’ உள்ளது. ஒரு கிலோ அவரைக்காய், 22 ரூபாய் முதல், 38 ரூபாய் வரை சந்தையில் விற்பனை ஆகிறது

click me!