Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது: தடுமாறி சுதாரித்த திருமாவளவன்!

டெல்லியில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

BJP will not win even one seat in Delhi loksabha election 2024 says thiruvmavalavan smp
Author
First Published May 5, 2024, 5:21 PM IST

டெல்லியில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வர வாய்ப்பு இல்லை என கூறிய விசிக தலைவர் திருமாவளவன் உடனடியாக சுதாரித்துக் கொண்டு பாஜகவுக்கு வாய்ப்பு இல்லை என்றார். நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான  திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரியலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக, இன்று  சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் திருமாவளவன் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இது குறித்து, விசிக வேட்பாளர் ரவிக்குமார், தேர்தல் அலுவலரிடத்தில் புகார்  அளித்துள்ளார்.

இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் உள்ள  சி.சி.டி.வி., கேமராக்கள் செயல் இழந்ததால், சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சில குளறுபடிகள் நடந்துள்ளன. அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலர்கள் சி.சி.டி.வி., கேமாராக்களை பராமரித்து, கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.

“பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி வரும் கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை காட்டுகிறது. அதை அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். அதற்கான சான்றுகளாக அவரது  உரைகள் அமைந்துள்ளது. அவருடைய நிலையை மறந்து, பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி, அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக, ‘தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார்’ என்ற அளவுக்கு பேசுவது, அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது, அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.” என திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறைகள் தொடக்கத்தில் இருந்தே, அதிர்ச்சியளிக்கும் வகையில் தான் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசியது தொடர்பாக, தேர்தல் ஆணையம், மோடிக்கு கடிதம் அனுப்பாமல் நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒருசார்பாகவும், ஆளுங்கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாகவும் இருக்கிறது. பிரதமரை விளக்கம் கேட்பதற்கு  கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட வேண்டும்.” என்றார்.

ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள்: உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் - முதல்வரின் சொந்த ஊரில் அவலம்!

“வி.சி.க. வேட்பாளர்கள் ஆந்திராவிலும் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறேன். இதேபோல், மகாராஷ்டிராவில் தாராவியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக 11ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். மகாராஷ்டிராவில் லத்துார் தொகுதியில் விடுதலைக் கட்சியின் சார்பில், வேட்பாளர் போட்டியிடுகிறார். தெலங்கானாவில், 7 தொகுதியில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர். அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். மற்ற இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்கிறோம்.” என திருமாவளவன் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது, டெல்லி முதல்வரை கைது செய்திருப்பது சரியில்ல என்பதை சுட்டிக்காட்டி கண்டித்து இருக்கிறோம். இது வரை, அரசியல் வரலாற்றிலேயே அமலாக்கத்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என சொல்லப்படுகிறது. முதல் முறையாக, ஒரு முதல்வரை, நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.

இதனால், இண்டியா கூட்டணிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது என்ற திருமாவளவன், “தேசிய ஜனநாயக முன்னணிக்கு (என்.டி.ஏ.,) கூட்டணிக்குத் தான் இதனால், பின்னடைவு ஏற்படும். டெல்லியில் ஏழு தொகுதிகளையும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள்  கைப்பற்றும். அங்கு ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வர வாய்ப்பு இல்லை. மன்னிக்க வேண்டும் பாஜக கட்சி வர வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் நான்கு தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்த ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வெற்றி பெறும்.” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios