அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை இதற்காகத்தான் நடத்தவில்லை …. திண்ணைப் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் குற்றச்சாட்டு !!
தமிழக அரசு இன்னும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு காரணம் தோல்வி பயம்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.
திமுகவைப் பொருத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இந்நிலையில நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணை பரப்புரை மேற்கொண்டார்.
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பாளையசெட்டிக்குளம், மேலகுளம், அரியகுளம் ஆகிய பகுதிக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட்ட ஸ்டாலினிடம், ஏராளமான பெண்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் உறுதியளித்தார்.