சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்…. பணிந்தது கேரள அரசு…
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த விவகாரத்தில் தேசவம்போர்டு எந்தவித முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் ஆதரவும், இந்து அமைப்புகள் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சபரிமலையில் நேற்று நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானாது. கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து போராட்டக்காரர்கள் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்பினர். மேலும், பெண் காவலர்கள் அங்கு பணியாற்றவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் போராட்டத்தை கைவிட தயரா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் தேவசம் போர்டு செல்லவில்லை என்றும் சபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருப்பதாகவும், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்கலாம் என தேவசம் போர்டுக்கு கேரள அரசு முழு அனுமதி அளித்துள்ளது. இந்த விஷயத்தில் போராட்டத்துக்கு கேரள அரசு பணிந்து விட்டதோடு இப்பிரச்சனையை தேவசம்போட்டு வசம் தள்ளிவிட்டு விட்டது.
இதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தேவசம் போர்டு கோவிலுக்கள் பெண்களை அனுமதிக்க மறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.