கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்றவர் எம்.ஜி.ஆர்.; ஓ.பி.எஸ். பெருமிதம்!
ஒரு நடிகருக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கலாம்; ஆனால், ஒரு நாட்டின் பிரதமரே ரசிகர் மன்றத்தை திறந்து வைக்கிறார் என்றால் அது எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றமாகத்தான் இருக்கும் என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓ.பி.எஸ். பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர்., கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்றவர் என்று கூறினார்.
எம்.ஜி.ஆர். நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக அரசியல் தலைவராக, முதலமைச்சராக நாம் அறிவோம். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். ஓலைக் குடிசைக்கும் விளக்கேற்றி வைத்தவர்.
நாடக உலகில் இருந்து திரைப்பட உலகில் காலடி வைத்த அவர், திரைப்பட உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.
ஒரு நடிகருக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டின் பிரதமரே ஒரு ரசிகர் மன்றத்தை திறந்து வைக்கிறார் என்றால் அது எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றமாகத்தான் இருக்கும். எம்.ஜி.ஆர். மரணமிலா பெருவாழ்வு வாழ்பவர் என்று, விழாவில் ஓ.பன்னீர்செல்வம்
எம்.ஜி.ஆரின் பெருமை குறித்து பேசினார்.