நியாயமாக நடத்த முடியலனா தேர்தல் ஆணையத்துக்கு பூட்டு போட்டுட்டு போக வேண்டியதுதான்..! தினகரன் பொளேர்..!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதை ஒட்டி ஆர்.கே.நகரில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரசாரம் மட்டுமல்லாமல் பணப்பட்டுவாடாவும் தீவிரமாக நடந்துவருவதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவைத் தடுப்பது தொடர்பாக தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, திமுக, அதிமுக, தினகரன், பாஜக சார்பில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிமுகவும் தினகரன் தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி கொள்கின்றன.
இதற்கிடையே ஆர்.கே.நகர் பிரசாரத்தில் பேசிய தினகரன், ஆர்.கே.நகரில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றம்சாட்டினார். என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நியாயமாக நடத்த முடியவில்லை என்றால் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று எதற்கு? தேர்தல் ஆணையத்திற்கு பூட்டு போட்டு பூட்டிவிட்டு போக வேண்டியதுதான் என சாடினார்.