Asianet News TamilAsianet News Tamil

வயநாட்டில் ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வயநாட்டில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்

Rahul gandhi to file his nomination in wayanad on april 3rd smp
Author
First Published Mar 28, 2024, 11:03 AM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், ஜூன் 1ஆம் தேதி கடைசி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன.

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகளை கொண்ட கேரள மாநிலத்துக்கு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வயநாட்டில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!

காங்கிரஸின் கோட்டையான வயநாடு மக்களவைத் தொகுதி 2009ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் வசம் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில் வெற்றி பெற்று சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அந்த தேர்தலில் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார்.

எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தல் 2024இல் ராகுல் காந்திக்கு மீண்டும் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட அக்கட்சி மேலிடம் வாய்ப்பளித்துள்ளது. ராகுல் காந்தியை எதிர்த்து கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios