காவல்நிலையம் அருகே மனைவியை சரமாரியாக வெட்டிக் கொடூரமாக கொன்ற கணவன்..! பயங்கர கொலை சம்பவத்தில் பரபரப்பு தீர்ப்பு..!
காவல் நிலையம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன்(40). இவரது மனைவி முத்துலட்சுமி(35). இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். கண்ணன் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதில் முத்துலட்சுமியை கண்ணன் பலமுறை தாக்கியிருக்கிறார்.
இதனால் கடந்த 2011 ம் ஆண்டு சமயநல்லூர் மகளிர் காவல்நிலையத்தில் கண்ணன் மீது முத்துலட்சுமி புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைக்காக கண்ணனை காவல்நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். முத்து லட்சுமியும் அங்கு வந்திருந்தார். அப்போது புகார் கொடுத்த மனைவி மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்த கண்ணன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக முத்துலட்சுமியை வெட்டினார்.
இதில் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் முத்துலட்சுமி பரிதாபக உயிரிழந்தார். காவல் நிலையம் அருகிலேயே நடந்த இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கண்ணன் மீது கொலைவழக்கு பதிவு செய்த சமயநல்லூர் காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான வழக்கு மதுரை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் முடிவில் கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புளோரா நேற்று உத்தரவிட்டார். மேலும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவரின் 3 மகன்களையும் மதுரை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கமாறு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.