இதை செய்தால் மட்டுமே இனி மக்களை காப்பாற்ற முடியும்..!! தலையில் அடித்துக் கதறும் வைரஸ் ஆராய்ச்சியாளர்..!!

By Ezhilarasan BabuFirst Published May 27, 2020, 10:51 AM IST
Highlights

அரிய காட்டு விலங்குகளில் மறைந்திருக்கும் அறியப்படாத வைரஸ்கள் பற்றி ஆராய்ந்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்க வேண்டும்,

அடுத்த ஒரு தொற்று நோயால் மனிதர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விரும்பினால்,  காட்டு விலங்குகள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவும் அறியப்படாத வைரஸ்களை பற்றி அறிந்து,  முன்கூட்டியே  எச்சரிக்கைகளை வழங்க வேண்டும் என புகழ்பெற்ற வைராலஜிஸ்ட் ஷி-ஜெங்லி தெரிவித்துள்ளார். கொரோனா போன்ற தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர்,  விஞ்ஞானம் அரசியலாக்கப்படக்கூடாது, ஆனால் அது அரசியலாக்கப்படுவது  மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.  கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால்  உலகம் முழுவதும் 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவில் தோன்றிய இந்த வைரஸால் உலக வல்லரசான அமெரிக்காவே நிலைகுலைந்து போயுள்ளது. 

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளும் வைரசால் பேரிழப்பை சந்தித்து வருகின்றன. ஒட்டுமொத்த பேரழிவுக்கும் சீனாதான் காரணம்,  சீனாவில் உள்ள வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது.  இதை சீனா திட்டமிட்டே பரப்பியுள்ளது என அமெரிக்கா சீனா மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.  ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவின் மீது  சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள  சீனாவின் புகழ்பெற்ற வைராலஜிஸ்ட்,  கொரோனா ஆராய்ச்சியில் தனிச்சிறப்பு பெற்ற விஞ்ஞானி,  சீனாவின் " பேட் பெண்மணி " என்று அழைக்கப்படும் வுஹான் இன்ஸ்டியூட் ஆஃப் வைராலஜியின் துணை இயக்குனர் ஷி -ஜெங்லி , தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பு மிக அவசியம் என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  

கொரோனா வைரஸ் என்பது விஞ்ஞானம்,  அறிவியல்,  அது அரசியல் அல்ல.ஆனால் விஞ்ஞானம் சில நேரங்களில் அரசியலாக்கப்படும் போது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வைரஸ் குறித்த ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகளும் அரசாங்கங்களும் வெளிப்படையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.ஆனால் அறிவியல், அரசியல் மயமாக்கப்படும் போது ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. அடுத்த தொற்றுநோய் படையெடுப்பில் மனிதர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விரும்பினால், அரிய காட்டு விலங்குகளில் மறைந்திருக்கும் அறியப்படாத வைரஸ்கள் பற்றி ஆராய்ந்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்க வேண்டும், நாங்கள் இந்த கொரோனா வைரஸை அந்த நோக்கத்தில்தான் ஆராய்ந்து வருகிறோம்,  நாம் அவற்றை ஆராயவில்லை என்றால் மற்றொரு வைரஸ் படையெடுப்பை நாம் தடுக்க முடியாது என தெரிவித்துள்ள அவர், வுஹான் ஆய்வகத்தில் ஆராயப்பட்ட குரோனோ வைரஸ் மரபணு பண்புகள்,  மனிதர்களில் பரவியுள்ள கொரோனா வைரசுடன் பொருந்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதை நான் என் வாழ்க்கையின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன், என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வைரஸ் தொற்றுக்கும் வுஹான் ஆய்வு கூடத்திற்கும் எந்த தொடர்புமில்லை,  ஆய்வகத்தில் இருந்து தான் வைரஸ் பரவியது என்று சொல்வது முழுக்க முழுக்க ஒரு கட்டுக்கதை என அவர் கூறியுள்ளார். 
 

click me!