ஒட்டுமொத்த அமெரிக்காவையும் ஆட்டி படைக்கப்போவது யார்.? ட்ரம்ப்பா- பிடனா?... நாளை மறுநாள் தெரிந்துவிடும்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 3, 2020, 10:59 AM IST
Highlights

வெற்றி பெறுபவர் வாஷிங்டன் டிசியில் உள்ள கேப்பிட்டல் கட்டிடத்தில் ஜனவரி 20ஆம் தேதி புதிய அதிபராக அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்பார். எனவே அதிபராக வெல்லப்போவது ட்ரம்பா? பிடனா? என்பது நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் அங்க முன்கூட்டியே 9.5 கோடி பேர் வாக்களித்து விட்டதாகவும், மீதமுள்ளவர்கள் இன்று வாக்களிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களத்தில் உள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது. இரு தரப்பினரும் தேர்தல் பிரச்சார குழு அமைத்து மாகாணங்கள் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று காரணமாக இணையதளம் வழியாகவும் பிரச்சாரம் நடைபெற்றது. கொரோனா வைரஸ், நிற பாகுபாடு போன்ற பிரச்சினைகளை மையமாக வைத்து பிரச்சாரம் நடைபெற்றது. கொரோனாவை மையமாக வைத்தே டிரம்புக்கு எதிராக ஜோ பிடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதேபோல ஜோ பிடன் சீனாவுக்கு ஆதரவானவர் என்றும் அவர் அதிபராக வெற்றிபெற்றால் அமெரிக்காவில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கும் எனவும் பிடனை எதிர்த்து ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 

இதுவரை தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுமார் 80 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தேர்தல் முடியும் தருவாயில் ஒரு லட்சம் கோடியாக உயர வாய்ப்புள்ளது எனவும் தனியார் நிறுவனம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. ஒருவழியாக தேர்தல் பிரச்சாரம் முடிவுற்று இன்று (இரவு)வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதாவது உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாக்குச் சாவடிகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்  தேர்தல் தேதிக்கு முன்கூட்டியே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. அதன்படி வழக்கம்போல தேர்தலுக்கு முன்பாகவே கோடிக்கணக்கான மக்கள் இந்த முறையும் வாக்களித்துள்ளனர். கொரோனா தொற்று மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்கு தேதிக்கு முன்பாகவே அஞ்சல் மூலமாகவும், வாக்குச்சாவடிகளுக்கும் சென்று மக்கள் வாக்களித்துள்ளனர். 

அந்த வகையில் சுமார் 9 கோடியே 50 லட்சத்து 26 ஆயிரத்து 832 அமெரிக்கர்கள் வாக்கு பதிவு செய்து முடித்துள்ளனர். இவற்றில் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரம்  ஆகும். மேலும் மெயில் மூலமாக இதுவரை 6 கோடியே 24 லட்சத்து 56 ஆயிரத்து 666 பேர் வாக்களித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையைவிட மெயில் வழியாக வாக்களித்தவர்கள் எண்ணிக்கையே அதிகமாகும். 

இந்த தேர்தலில் வாக்காளர்கள் ட்ரம்புக்கோ அல்லது ஜோ பிடனுக்கோ நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அதற்கு மாற்றாக எலக்டோரல்  காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அதாவது மக்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுக்கும்போது தகுதியற்ற ஒருவர் அதிபராகிவிடக் கூடாது என்பதை தவிர்க்கும் வகையில் இந்த முறையை பின்பற்ற படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப (எலக்டோரல்  காலேஜ்)  வாக்காளர் குழு இருப்பர் என்றும் அந்த வகையில் அமெரிக்காவில் 538 பேர் கொண்ட வாக்காளர் குழு உள்ளதாகவும் இவர்களில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட வேட்பாளர் தான் அதிபராக வெற்றி பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாகாணங்களில் எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ அவர்கள்தான் அந்த மாகாணத்தின் மொத்த வாக்காளர்கள் உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று இரவு நடைபெறுகிறது, முடிந்தவுடனே வாக்கு எண்ணிக்கை நடைபெறும், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் முழுமையாக வெளியாக நீண்ட நேரம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெற்றி பெறுபவர் வாஷிங்டன் டிசியில் உள்ள கேப்பிட்டல் கட்டிடத்தில் ஜனவரி 20ஆம் தேதி புதிய அதிபராக அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்பார். எனவே அதிபராக வெல்லப்போவது ட்ரம்பா? பிடனா? என்பது நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

 

click me!