
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனைப் பற்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தனது தோழியிடம் விசாரித்த விவகாரம் வெளியாகி பரபரப்பாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8 ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
ஹிலாரி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு ஆதாரங்கள் அடங்கிய 33,000 இமெயில்களை அவர் அழித்த விவகாரம் அதிபர் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹிலாரியின் இ-மெயில் விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது, தேர்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. முன்னதாக இரு வேட்பாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட நேரடி விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ஹிலாரியின் கையே ஓங்கியிருந்தது.
இதற்கிடையே தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கு தற்போது எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளது.
இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு நிறுவன இயக்குனர் ஜேம்ஸ் சமீபத்தில் அறிவித்தது ஹிலாரியின் செல்வாக்கு சரிய காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ஹிலாரி அமைச்சராக பதவிவகித்தபோது அவரது நெருங்கிய தோழியாக இருந்த பாகிஸ்தானியப் பெண் ஹுமா அபைதின் என்பவரது கணவரும் முன்னாள் எம்.பி.,யுமான அந்தோணி வீய்னர் என்பவருக்கு சொந்தமான லேப்டாப் மூலம் அனுப்பப்பட்ட சுமார் ஆறரை லட்சம் இமெயில் பரிமாற்றங்கள் தொடர்பாகவும் எப்.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த இமெயில்களில் பலவற்றில் உள்ள விபரங்கள் வெளியே கசிந்துள்ளன. அவ்வாறு கசிந்த ஒரு தகவலை அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.
அதில், 20-7-2011 அன்று மாலை சுமார் 7 மணியளவில் ஹிலாரிக்கும் ஹுமா அபைதினுக்கும் இடையில் நடைபெற்ற இந்த தகவல் பரிமாற்றத்தில்,
நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தோமே அந்தப் புகழ்பெற்ற வயதான இந்திய நடிகரின் பெயர் என்ன?' என்று ஹிலாரி கேட்கிறார். அதற்கு பதில் மெயில் அனுப்பிய ஹுமா அபைதின், 'அமிதாப் பச்சன்' என்று தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சனைப் பற்றி ஹிலாரி கிளிண்டன் விசாரித்ததற்கான பின்னணி என்ன? என்பது அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பான விவாதப்பொருளாக மாறியுள்ளது