அமெரிக்காவில் வைராஸ் தொற்று விகிதம் வெகுவாக குறைந்தது..!! புள்ளி விவரத்தை அடுக்கும் ட்ரம்ப்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2020, 5:45 PM IST
Highlights

அமெரிக்காவில்  கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு  14 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா இருந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவில்  கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு  14 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா இருந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதுவரை 2 கோடியே  2 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1 கோடியே 32 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. 

இதுவரை அந்நாட்டில் 52 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 27 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரையில் இந்த வைரஸை தடுக்க அந்நாட்டு அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் அது கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக  தாக்கி வருகிறது. இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிபோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதேநேரத்தில் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆசிய, ஐரோப்பிய நாடுகளும் ஈடுபட்டுள்ளன. 

தடுப்பூசி ஆராய்ச்சியில் அமெரிக்கா மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து எங்களிடம் இருக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன், மருந்து கண்டுபிடிக்கப்பட்ட உடன் அது அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அந்நாட்டில் நோய் பரவல் விகிதம் குறித்து தெரிவித்துள்ள அவர், எப்போதும் இல்லாத வகையில், கடந்த 7 நாட்களாக வைரஸ் தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளதாகவும், மொத்தத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதம் குறைந்துள்ளதாகவும், அதிலும் உயிரிழப்பு விகிதம் 9 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். 

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கொரோனா வைரஸ் விவகாரம் ட்ரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதை அவர் சமாளிக்க கொரோனா வைரசுக்கு எதிராக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும், கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறி வருகிறார். அவரின் இந்த கருத்து எதிர்க்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. 

 

click me!