ஸ்டாக்ஹோம் நகரில் சூப்பர் மார்க்கெட்டில் லாரியை ஏற்றி 3 பேர் பலி
தீவிரவாதிகள் தாக்குதலா?
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மக்கள் நடமாடும் டிராட்டிங்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் திடீரென புகுந்த டிரக் மோதி 3 பேர் பலியாகி உள்ளனர்.
சுவீடனில் ஸ்டாக்ஹோம் நகரில் டிராட்டிங்ஹாட்டன் என்ற பகுதியானது மக்கள் அதிகமாக கூடும் இடமாகும். இந்த பகுதியில் டிரக் ஒன்று அசுர வேகத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்தது. டிரக் வேகமாக வருவதை கண்ட மக்கள் அலறி அடித்துகொண்டு ஓடினர். இதில் 3 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது விபத்தா? அல்லது தீவிரவாதிகளின் தாக்குதலா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்திய தூதரகம் அமைந்துள்ள இடத்துக்கு 100 மீட்டர் அருகே நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவீடனுக்கு இந்தியா துணை நிற்கும்-பிரதமர் மோடி
சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “ ஸ்டாக்ஹோம் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள், பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், விரைவில்குணமடையவும் இறைவனை வேண்டுகிறேன். ஸ்வீடன் மக்களுக்கு எப்போதும் இந்தியா உறுதுணையாக இருக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.