
இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவும் விலக வேண்டும். போலியான கலந்துரையாடல்களில் பங்கேற்கமாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதேஸா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அரசின் தவறான, அழிவுக்கு வழிவகுக்கும் பொருளாதாரக் கொள்கையால் மக்கள் ஒருநாள் இரவில் பிச்சைபாத்திரம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையை தேசத்தை மோசமான பொருளாதாரச் சூழலுக்குத் தள்ளிய அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
நாட்டை அழிவுக்குகொண்டு சென்ற ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகக் கோரி மக்கள் கடந்த பி்ப்ரவரி மாதம் முதல் போராடி வருகிறார்கள். ராஜபக்ச குடும்பத்தில் அனைவரும் பதவியிலிருந்து இறங்கிய நிலையில் அதிபர் கோத்தபய மட்டும் விலகவில்லை.
கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து விலகக் கோரி மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாகப் போராடி வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகை முன் இன்று போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தினர், போலீஸார் பாதுகாப்பையும் மீறி அதிபர் மாளிகைக்குள் புகுந்து அதைக் கைப்பற்றினர்.
ஆனால், போராட்டம் தீவிரமாகும் என்பதை முன்பே அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச ராணுவத்தின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று இரவே அழைத்துச் செல்லப்பட்டார். இலங்கையில் நிலவும் அசாதாரண நிலை குறித்து அவசரமா ஆலோசிக்க அமைச்சரவையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரியுள்ளார்.
இலங்கை பொதுஜனா பெரமுனா கட்சியியைச் சேர்ந்த16 எம்பிக்கள், இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்ச உடனடியாக விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரமதேஸா, வெளியிட்ட அறிக்கையில், “ இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவும், அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும். ரணில் ஏற்பாடு செய்திருக்கும் ஆலோசனைக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பங்கேற்காது.
மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பதுங்கி இந்த ராஜபக்சக்களை மீண்டும் அரசியல் களத்துக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு அளி்த்து, இந்த போராட்டத்துக்கு துரோகம்இழைத்தவர் ரணில் விக்ரமசிங்கே. கோத்தய ராஜபக்ச அரசாங்கத்தின் பாதுகாவலர்களின் பாதுகாப்பில் இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க நாங்கள் விரும்பவில்லை. ஆதலால் ரணில் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம். மக்கள் போராட்டத்தை நடத்திய அமைப்புகளுடன் சேர்ந்து முன்நின்று நாட்டை கட்டி எழுப்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.