ரணில் விக்ரமசிங்கே போர்க்கொடி...! இலங்கை நாடாளுமன்றம் முடக்கம்!

By vinoth kumarFirst Published Oct 27, 2018, 1:36 PM IST
Highlights

இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இதனால் இலங்கை அரசியலில் பதற்றம் நிலவி வருகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இதனால் இலங்கை அரசியலில் பதற்றம் நிலவி வருகிறது. நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே கூறிய நிலையில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பெருபான்மை இல்லை என்று கூறப்பட்ட நிலையில் முடக்கி உள்ளனர். 

2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிறிசேனா மற்றும் விக்ரமசிங்கே ஆட்சியை பிடித்தனர். சிறிசேனா அதிபரான நிலையில் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வென்று விக்ரமசிங்கே பிரதமர் ஆனார். இந்த நிலையில் திடீரென நேற்று விக்ரம சிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

அத்துடன் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராகவும் நியமித்து சிறிசேனா உத்தரவிட்டார். உடனடியாக அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுக் கொண்டார். இலங்கையில் நடைபெற்ற இந்த அரசியல் மாற்றத்தால் அந்நாட்டில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நாடாளுமன்றத்தில் சிறிசேனா மற்றும் ராஜபக்சே கூட்டணிக்கு 95 எம்.பிக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.

 

அதே சமயம் பதவி நீக்கம் செய்யப்பட்ட விக்ரமசிங்கேவுக்கு 106 எம்.எபிக்களின் ஆதரவு உள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் ராஜபக்சே பிரதமராகியுள்ளது அரசியல் அமைப்பு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பேசிய ரணில் விக்ரமசிங்கே, தான் இலங்கையின் பிரதமராக நீடிப்பதாக நேற்று கூறியிருந்தார்.

மேலும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். இந்நிலையில் ராஜபக்சேவுக்கு பெருபான்மை இல்லை என்று கூறப்படுவதால் இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்குவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

click me!