
இலங்கையின் முன்னாள் அதிபரும், ஆறு முறை பிரதமராகப் பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்கே (76) இன்று (ஆகஸ்ட் 22, 2025) கைது செய்யப்பட்டார். தனது அதிபர் பதவிக் காலத்தில் அரசு நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குற்றச்சாட்டு என்ன?
2022 முதல் 2024 வரை இலங்கை அதிபராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கே, தன் மனைவி மைத்திரி 2023 செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது, அந்தப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரசு நிதியைப் பயன்படுத்தி இங்கிலாந்து சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினர் (CID) விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணைக்கு ஆஜரான ரணில் விக்ரமசிங்கே
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே இன்று சிஐடி போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, போலீசார் அவரைக் கைது செய்தனர். அவர் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து பதவியை விட்டு விலகிய பிறகு, 2022 ஜூலை மாதம் நடந்த அவசர நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்கே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.