சீனப் படைகளை தெறிக்கவிட ரஷ்ய துப்பாக்கிகள்: 2290 கோடியில் நவீன ஆயுதங்கள் வாங்க இந்தியா முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2020, 11:07 AM IST
Highlights

இத்தகைய சூழ்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றுமொரு நவீன துப்பாக்கிகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. பெரும்பாலான ராணுவ வீரர்களுக்கு ரஷ்யாவில் 7.62 x 39  மில்லிமீட்டர் காலிபர் ஏகே 203-ரக கிளாஸ்னிகோவ் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளது.

சீனா-பாகிஸ்தான் இந்திய எல்லையில் தொல்லை கொடுத்து வரும் நிலையில், சுமார் 2290 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக நவீன ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு துறை அமைச்சகம் ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து சுமார் 72 ஆயிரம் சிக் சாவர் துப்பாக்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய எல்லையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. ஒருபுறம் சீனாவும் மறுபுறம் பாகிஸ்தானும் இந்திய எல்லையில் அத்துமீறி வருகின்றன. கடந்த மே மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா படைகளை குவித்த நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. அதேபோல் ஜூன் பதினோராம் தேதி இரவு இந்திய எல்லையில் அத்துமீறி  நுழைந்து சீன படையினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்தது. பின்னர் இரு நாடுகளும் மாறிமாறி படைகளை குவித்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது. ஆனால் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருநாடுகளும் எல்லையில் இருந்து படைகளை பின் வாங்க முடிவு செய்தன. சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சீனா படைகளை பின் வாங்கினாலும் விரல் பகுதி, கோக்ரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து படைகளைப் பின் வாங்க மறுத்து வருகிறது. 

அதே போல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவில் மீண்டும் எல்லையில் அத்துமீற சீன படையினர் முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் மறுபுறம் சீனா டோக்லாமை ஒட்டி ஏராளமான ஆயுதங்களை குவித்து வருகிறது. அணு ஏவுகணைகள், டாங்கர்கள் குவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நேரத்தில் சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவை எதிர்த்து வருவதால் இரு நாடுகளையும் ஒருசேர எதிர்கொள்ள இந்தியா தயாராகிவருகிறது. ஏற்கனவே சுமார் 58,000 கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவிடமிருந்து s400 அணு ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை இந்தியா இறக்குமதி செய்யவுள்ளது. இந்நிலையில் கிழக்கு லடாக்கில் சீனாவுடன் அதிகரித்துவரும் பதற்றத்திற்கு மத்தியில் சுமார் 2,290 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார்  970 கோடி ரூபாய்க்கு எதிர்ப்பு விமானநிலைய ஆயுதங்கள்,  மற்றும் எச் எஃப் ட்ரான்ஸ் ரிசிவர் செட் 540 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் அமெரிக்காவிலிருந்து 780 கோடி ரூபாய் மதிப்பில் 72,000  சிக் சாவர் தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் புதிய ஆயுதங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும்  (FTP)கீழ் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக் சாவர் துப்பாக்கியை வாங்குவது இது இரண்டாவது முறை ஆகும் கடந்த 2010ம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சகம் 72,400 அமெரிக்கா சிக் சாவர்களை வாங்க உத்தரவிட்டது. அவற்றை வாங்க சுமார் 647 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதேபோல் 7.62 X 51 மில்லி மீட்டர் லைட் மெஷின் கன் (எல் எம் ஜி) வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்த இயந்திரத் துப்பாக்கிகள் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய துருப்புகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.  இருப்பினும் ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த எண்ணிக்கையில் வாங்கிய தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும்  எல்எம்ஜிகள் போதுமானதாக இல்லை . இத்தகைய சூழ்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றுமொரு நவீன துப்பாக்கிகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. பெரும்பாலான ராணுவ வீரர்களுக்கு ரஷ்யாவில் 7.62 x 39  மில்லிமீட்டர் காலிபர் ஏகே 203-ரக கிளாஸ்னிகோவ் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளது. 

இந்தத் துப்பாக்கியை 300 மீட்டர் தூரத்திற்கு இலக்காக கொள்ள முடியும், அதேநேரத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் 6. 71 லட்சம் ஏகே 203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது உத்திரப் பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் அமைந்துள்ள கோர்வா கட்டளை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட உள்ளது.புதிய பாதுகாப்பு மற்றும் நவீன ஆயுதங்கள் கையகப்படுத்துதல் நடைமுறை அக்டோபர் 1 முதல் செயல்படுத்தப்படும் எனவும், உள்நாட்டு பாதுகாப்பு துறையை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இது செயல்பட உள்ளது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதாவது பாதுகாப்பு துறையில் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதே இந்த முயற்சியின்  நோக்கமாகும் எனராஜ்நாத்  சிங் கூறியுள்ளார்.

 

click me!