கொரோனாவைவிட மனிதர்களை தாக்கும் பேராபத்து...!! தொடர் ஊரடங்கால் வந்த வினை..!!

By Ezhilarasan BabuFirst Published May 23, 2020, 7:16 PM IST
Highlights

மனநல பிரச்சினைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இதே நிலை தொடர்ந்தால் மனோரீதியான பிரச்சனைகள் சுனாமியாக  தாக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளார். 

தொடர் ஊரடங்கு மற்றும்  அதில் சந்தித்து வரும் நெருக்கடிகள் காரணமாக மக்கள் ஒருவித மனரீதியான பிரச்சினைகளுக்கு  ஆட்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உலக அளவில் மனநல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் , முதியவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் மருத்துவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர் .  குறிப்பாக சுய தனிமைப்படுத்தல்  கட்டாயம் என்பதால் இதை பெரும்பாலும் யாரும்  பொருட்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளார். மனநலம் தொடர்பான அவசரகால வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதே நேரத்தில் வழக்கமாக பரிசோதனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டுகின்றனர்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரை 53 லட்சத்து 31 ஆயிரத்து 427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்து 566 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவை இந்த வைரஸ் மிக கொடூரமாக பாதித்து வருகிறது. 

கிட்டத்தட்ட அமெரிக்காவில் 16 லட்சத்து 45 ஆயிரத்து 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அங்கு இதுவரை 97 ஆயிரத்து  663 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதனையடுத்து ரஷ்யா, பிரேசில் , ஸ்பெயின் , பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன், துருக்கி, ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா பட்டியலில் முதல் 10  இடங்களை பெற்றுள்ளன . இந்த வைரஸால் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன,  கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் முழுஅடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது,  தொழிற்சாலைகள், பொது போக்குவரத்து என அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.  இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை இழந்து வறுமையில் தவித்து வருகின்றனர், தொடர்ந்து வீடுகளுக்குள் அடைபட்டு கிடப்பதால் மக்கள் ஒருவித மனச்சோர்வுக்கும்  அல்லது மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆளாகும் ஆபத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக உலகளவில் மனநல ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள 

ராயல் கல்லூரி பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்களின் தலைவர் வெண்டி பர்ன், "கோவிட் -19 நெருக்கடி மக்களின் மன ஆரோக்கியத்தில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள்  பார்த்து வருகிறோம்" அதில் பலருக்கு உடனடி உதவிகள் தேவைப்படுகிறது எனவும்,  தொடர்ந்து மக்கள் வீடுகளில் அடைபட்டு உள்ளதால் ஒருவித மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் எதிர்காலம் குறித்த கவலை பலருக்கு மேலோங்கியிருக்கிறது எனவும் கூறியுள்ளார். ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுவதால் ,  மனநல பிரச்சினைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இதே நிலை தொடர்ந்தால் மனோரீதியான பிரச்சனைகள் சுனாமியாக  தாக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.  இங்கிலாந்தைச் சேர்ந்த  திங்க்ஸ்டாக் மருத்துவர்கள் சுமார் 1300 பேரிடம் நடத்திய ஆய்வில் 43% பேருக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாக கூறியுள்ளனர்,  பெரும்பாலானவர்களுக்கு உண்மையில் பாதிப்பு இருந்தாலும்கூட அவர்கள் சிகிச்சை எடுக்க தயங்குகின்றனர் என்பது அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயால் சமூக தனிமைப்படுத்துதலால்  பல நோயாளிகள் மன அழுத்தம் மற்றும் மன நோய்க்கான அறிகுறிகளை பெற்றுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 

click me!