தடுப்பூசி வராவிட்டால் மக்களை காப்பாற்ற முடியாது..!! கதறும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள்..!!

By Ezhilarasan BabuFirst Published May 15, 2020, 2:28 PM IST
Highlights

எனவே ஒரு தடுப்பூசி இல்லாமல், இரண்டாம் கட்ட நோய்பரவலை தவிர்ப்பதற்கு தற்போதுள்ள சமூக நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் போதாது" என்று பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
 

சமூகத்தில் பரவியுள்ள இந்த வைரஸால் இன்னும் கூட  போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி  உருவாகவில்லை ,  இது முற்றிலும் கவலை ஏற்படுத்தும் அறிகுறி என பிரெஞ்சு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் .  எனவே இரண்டாவது கட்ட பரவலை தடுப்பது கடினம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர் .  உலகம் முழுதும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .  அதற்கடுத்து இத்தாலி  ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன ,  சீனா பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில்  வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் ,  இந்த வைரசால் சமூகத்தில் எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது என்பதற்கான ஆராய்ச்சியில் பிரான்ஸ்  நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் சீனாவில் இந்த வைரசின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது ,  கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வைரஸ் பிறப்பிடமான வுஹானில் எந்தவிதமான தொற்றும் இல்லாதிருந்த நிலையில் மீண்டும் அங்கு வைரஸ் தொற்று தலை காட்ட தொடங்கியுள்ளது.  இதனால் அந் நகரத்தில் அடுத்த பத்து நாட்களுக்குள் சுமார் 11 கோடி பேருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது இது குறித்து தெரிவித்துள்ள சீன தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சாங் ஷுலி  , சீனாவில் மீண்டும் தலைகாட்டும் வைரஸ்  தொற்றை விரைந்து தடுக்க வேண்டும்  என்பதால் சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது  என கூறியுள்ளார் .  எனவே இந்த வைரஸ்  தற்போது பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும்  மீண்டும் அங்கு  இரண்டாம் கட்ட பரவல்  உருவாகும் என்ற அச்சம் இருந்து வருகிறது . இதற்கிடையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனதின் அவசரகால நிபுணர்  மைக் ரியன் ஒரு பிரத்யேக தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை இந்த வைரஸ் ஒருபோதும் சமூகத்தை விட்டு போகாது,  இந்த வைரஸ் நம்முடைய வாழ்வில் கலந்துவிட்ட ஒன்றாக இருக்கும் என கூறியுள்ளார் . 

சீனாவைப் போலவே   பிரான்ஸ் இத்தாலி ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கை தளர்த்த திட்டமிட்டு வரும் நிலையில் , அந்நாடுகளில்  ஏற்பட்டுள்ள சமூக நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்  ஈடுபட்டு வந்தனர் ,  இந்நிலையில் கொரோனா வைரஸை பொறுத்தவரையில் போதிய   "சமூக நோய் எதிர்ப்பு சக்தி "  உருவாகவில்லை என தெரியவந்துள்ளது .  சமூக நோய் எதிர்ப்பு சக்தி என்பது  நாட்டின் மக்கள் தொகையில் போதிய அளவிலான மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதன் மூலம்  மீண்டும் அங்கு  நோய் பரவலை தடுக்க முடியும் என்பதே ஆகும். பல நாடுகளில்  65 சதவீதத்தை விட கொரோனா பாதிப்பு குறைவு என்பதால் போதுமான சமூக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை.  எனவே ஒரு தடுப்பூசி இல்லாமல், இரண்டாம் கட்ட நோய்பரவலை தவிர்ப்பதற்கு தற்போதுள்ள சமூக நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் போதாது" என்று பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

பிரான்சில் இதுவரை 27 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் ,  பாஸ்டர் இன்ஸ்டிடியூட் தலைமையிலான ஆய்வில்  இது மக்கள் தொகையில் 4.4 சதவீதம் மட்டுமே அல்லது 2.8 மில்லியன் மக்கள் மட்டுமே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  பாரிஸ் போன்ற கடும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இது 9 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்தது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது .  ஆனாலும் கூட 65% எண்ணிக்கை விட இது மிகக் குறைவு எனவே சமூகத்தில் போதுமான அளவிற்கு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வில்லை இதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாது என பிரெஞ்சு விஞ்ஞானிகள் மேற்கோள் காட்டுகின்றனர்.தற்போது உலக அளவில் இரண்டாவது அலை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் மே 11-ஆம் தேதிக்கு பிறகு திறமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் . 
 

click me!