கட்டுக்கடங்காத கலவரம்... இலங்கை மக்களிடம் கெஞ்சும் கோட்டபய ராஜபக்சே!!

By Narendran SFirst Published May 10, 2022, 8:01 PM IST
Highlights

இலங்கையில் மக்கள் அமைதிகாக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அதிபர் கோட்டபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் மக்கள் அமைதிகாக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அதிபர் கோட்டபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் வீதியில் இறங்கி போராடி வந்தனர். இலங்கை பொருளாதாரத்தின் மிகப்பெரிய சரிவுக்கு இந்த இருவர்தான் காரணம் என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று திடீரென இலங்கை அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் போராட்டம் நடந்த போது நடந்த மோதலால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்தது. இதனிடையே போராட்டகரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் ஆளும்கட்சியின் எம்.பி  ஒருவர் உயிரிழந்தார். இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

I appeal and urge people to remain calm & stop violence & acts of revenge against citizens, irrespective of political affiliations.

All efforts will be made to restore political stability through consensus, within constitutional mandate & to resolve economic crisis.

— Gotabaya Rajapaksa (@GotabayaR)

வன்முறை சம்பவங்களால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதில் மொத்த வீடும் தீக்கிரையானது. மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த பல எம்பிக்கள், மேயர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளும் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் இலங்கையில் மக்கள் அமைதிகாக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அதிபர் கோட்டபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசியல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், ஒருமித்த கருத்துகள் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

click me!