தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது..!! ரஷ்ய விஞ்ஞானிகள் அதிரடி அறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 8, 2020, 5:33 PM IST
Highlights

ரஷ்யா அதிவேகமாக உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை கவலை அளிப்பதாக கூறியிருந்தனர். மேலும் ஆராய்ச்சியாளர்கள் முழு செயல்முறையையும் பின்பற்றி இருக்கமாட்டார்கள் என  சந்தேகம் தெரிவித்தனர். 

தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து ரஷ்ய விஞ்ஞானிகள் முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதாவது ஆரம்பகால சோதனைகளில் இது ஒரு நோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கியதாக கூறியுள்ளனர். அதாவது தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிகள் உடலில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், கடுமையான பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்றும், மருத்துவ இதழான  தி லான்செட்டில் கூறியுள்ளனர்.

உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரஷ்யா கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தது. அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தனது மகளுக்கு அந்த தடுப்பு ஊசியை செலுத்தி பரிசோதித்ததாகவும் அவர் கூறினார். ஆகஸ்ட் மாதத்தில் உள்ளூர் மக்களின் பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு செய்த முதல் நாடு ரஷ்யா ஆகும். ஏனெனில் ஆராய்ச்சியின் தரவுகளை வெளியிடுவதற்கு முன்பே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பை சில மேற்கத்திய நாடுகளின் வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்தனர். 

ரஷ்யா அதிவேகமாக உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை கவலை அளிப்பதாக கூறியிருந்தனர். மேலும் ஆராய்ச்சியாளர்கள் முழு செயல்முறையையும் பின்பற்றி இருக்கமாட்டார்கள் என  சந்தேகம் தெரிவித்தனர். இந்த தடுப்பூசிக்கு  ஸ்பூட்னிக்-வி  என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் இரண்டு சோதனைகள் ஜூன் முதல் ஜூலை வரை நடத்தப்பட்டன. தி லான்செட்டின் கூற்றுப்படி ஒவ்வொரு சோதனையின்போதும் 38 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி மற்றும் மூன்று வாரங்களுக்கு பிறகு ஒரு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்த சோதனைகளில் பங்கேற்றவர்கள் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த நபர்கள் 42 நாட்களுக்கு கண்காணிக்கப்பட்டனர். மூன்று வாரங்களுக்குள் அனைத்து  நபர்களின் உடலிலும் ஆன்டிபாடிகள்  உருவாகின. 

கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் காணப்படும் பொதுவான பக்க விளைவுகள் தலை வலி மற்றும் மூட்டு வலி போன்றவை தென்பட்டன. இந்நிலையில் மூன்றாம் கட்ட  பரிசோதனையில் கிட்டத்தட்ட 40,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வயது மற்றும் வெவ்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் ஆவர். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி அடினோ வைரஸ் என்ற வைரஸின் அறிகுறிகளின் அடிப்படையில் செயல்படுகிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை உருவாக்கும் திறன் கொண்டவையாக உள்ளன. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் சில விஞ்ஞானிகள், இந்த தடுப்பூசி குறித்து வெளிவந்த முடிவுகள் நிச்சயமாக ஊக்கமளிப்பதாகவும், முடிந்தவரை நல்லவையாகவும் உள்ளது என கூறியுள்ளனர். ஆனால் ஒரு நீண்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை மறுக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். தடுப்பூசி தயாரிப்பதற்காக, ரஷ்ய முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிக் ஒரு செய்தியாளர் கூட்டத்தில்,பேசுகையில் பரிசோதனையின் அடுத்த கட்டத்திற்கு ஏற்கனவே மூவாயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார். 

அதிக ஆபத்துள்ள குழுக்களைக் கருத்தில் கொண்டு, நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களுக்குள் தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்படும் என்று ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். ரஷ்யா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை நல்லது," என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் நுண்ணுயிர் நோய்க்கிருமிகளின் பேராசிரியர் பிரெண்டன் வெய்ன் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 176 தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சுமார் 34 தடுப்பூசிகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்படுகின்றன. அவற்றில் எட்டு மூன்றாம் கட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. 

 

click me!