#UnmaskingChina: இந்தியா தங்கள் ராணுவத்தை அடக்கிவைக்க வேண்டும்..!சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் திமிர் பேச்சு

By Ezhilarasan BabuFirst Published Jun 17, 2020, 8:46 PM IST
Highlights

சீன ராணுவம், இந்திய ராணுவ வீரர்கள்மீது  திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாவும், இதற்கு சீனா முழு பெறுப்பேற்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். 

சீன ராணுவம், இந்திய ராணுவ வீரர்கள்மீது  திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாவும், இதற்கு சீனா முழு பெறுப்பேற்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். அதற்கு, இந்தியா தங்களது ராணுவத்தை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என சீனா எச்சரித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, மே-22ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவம் எல்லை மீறி விட்டதாக கூறி சீனா ஏராளமான படைகளை குவித்தது, அதைத்தொடர்ந்து இந்திய ராணுவமும் படைகள் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. பதற்றத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தணித்துக் கொள்வது என இருநாடுகளும் முடிவு செய்த நிலையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், அதேபோல் சீன தரப்பிலும் 35 ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவ வீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம் நரவானே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படை தலைவர்களுடன் எல்லை விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தியா சீனாவின் எல்லா நடவடிக்கைகளையும் வேடிக்கை பார்க்காது என்றும், தகுந்த பதிலடி கொடுக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யிவுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது பேசிய வாங்-யி, மோதலுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்கவும் இந்திய முன்னணி இராணுவ துருப்புகளை இந்தியா கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வை மீறி இந்திய வீரர்கள் சீன எல்லைக்குள் நுழைந்து தாக்கியதாகவும் வாங்-யி தெரிவித்துள்ளார். சீனா மேலும் மோதல்களை தவிர்க்க விரும்புவதாகவும், இந்தியா ராணுவத் துருப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் எல்லையை கடக்க கூடாது, ஆத்திரமூட்டும் சைகைகளை செய்யக்கூடாது என எச்சரித்துள்ளார். எல்லை நிலைமையை அது மேலும் சிக்கலாக்கும் என ஜெய்சங்கரிடம் அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் சீனாவின்  கூற்றை முற்றிலுமாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் இந்த நடவடிக்கை இருதரப்பு உறவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும், சீனா தன் நடவடிக்கைகளை மறுமதிப்பீடு செய்து சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், கல்வானில் நடந்தது சீனாவால் முன்னரே  திட்டமிடப்பட்டது, இதற்கான பின்விளைவுகளுக்கு சீனாவே பொறுப்பேற்க வேண்டும் என ஜெய்சங்கர் சீனாவை எச்சரித்துள்ளார். மேலும் இந்த பேச்சுவார்த்தையின்போது தற்போது நிலவும் சூழ்நிலையை இருநாடுகளும் பொறுப்புடன் கையாள்வது எனவும், ஜூன்-6ஆம் தேதி முடிவு செய்யப்பட்டபடி ராணுவத்தை வாபஸ் பெற்றுக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

click me!