
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அந்நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தேவைப்பட்டால், அமெரிக்கா தனியாக இறங்கி தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை அழிக்கும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாத அமைப்புகள்
ஐ.நா. தடை செய்த பல தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம் வருகின்றன. தீவிரவாதிகளுக்கு புகலிடம் தரக்கூடாது அவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடிக்கடி பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அதிலும் காஷ்மீர் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குபின், தனது நிலையை அமெரிக்கா கடுமையாக்கி உள்ளது.
பாரபட்சம்
இந்நிலையில், அமெரிக்காவின் தீவிரவாத நிதிதடுப்பு அமைச்சகத்தின் துணை அமைச்சர் ஆடம் சுபின், வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ். ஐ. அந்நாட்டில் சுதந்திரமாக நடமாடும், செயல்படும் தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகள் மீது ஒரே மாதிரியாக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. சில தீவிரவாத அமைப்புகள் செய்யும் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அந்த நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் அளித்து வருகிறோம். அதேசமயம், பாகிஸ்தானுக்கு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையிலும், நிதி உதவியைத் தடுப்பதில் தொடர்ந்து நாங்கள் உதவி செய்வதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்காது.
அதேசமயம், தீவிரவாதி அமைப்புகள், தீவிரவாதிகள் மத்தியில் பாகுபாடுகாட்டி, ஒரேமாதிரியான நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தவறும் பட்சத்தில், அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கி எங்களது படைகள் மூலம் தீவிரவாதிகளை அழிக்கவும் தயங்காது.
பாகிஸ்தானும் தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம். பாகிஸ்தானும் தங்கள் வடமேற்கு பகுதியில் பாதுகாப்பாக பதுங்கி இருக்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. ஆனால், உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த வேறுபாட்டை பொறுத்திருக்க முடியாது.
இதவரை பாகிஸ்தான் தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கு எதிராக போதுமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எல்லைதாண்டி நடத்தும் ஆப்கானிஸ்தானில் இருக்கும்நேட்டோ படைகளுக்கு எதிராக தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இது குறிப்பாக அமெரிகர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.