
தாய்லாந்தின் புகெட் (Phuket) சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று விபத்தில் சிக்கியுள்ளது. அதாவது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, புகெட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது 'ஹார்ட் லேண்டிங்' (Hard Landing) எனப்படும் அதிரடியான முறையில் தரையைத் தொட்டது. இதனால் விமானத்தின் அடிப்பகுதி மற்றும் சக்கரங்களுக்குச் சேதம் ஏற்பட்டது.
அந்த விமானம் கடினமாக தரையிறங்கியதால் விமானத்தில் இயந்திரக் கோளாறு அல்லது கட்டமைப்புச் சேதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சேதமடைந்த விமானத்தை ஓடுதளத்திலிருந்து அகற்றும் பணிகளுக்காக, புகெட் விமான நிலையத்தின் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின்போது விமானத்தில் 131 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் காரணமாக புகெட் ஓடுதளம் மூடப்பட்டதால் அங்கு வர வேண்டிய மற்ற விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இப்போது உங்களுக்கு ஹார்ட் லேண்டிங் என்றால் என்ன? என்ற கேள்வி எழுந்திருக்கும். ஒரு விமானம் சாதாரண நிலையில் மென்மையாகத் தரையிறங்க வேண்டும். ஆனால், மோசமான வானிலை, காற்றின் வேகம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் வழக்கத்தை விட அதிக வேகத்துடனும் விசையுடனும் தரையில் மோதித் தரையிறங்குவதை 'ஹார்ட் லேண்டிங்' என்று கூறுவார்கள்.
அடிக்கடி சர்ச்சையில் ஏர் இந்தியா விமானம்
கடந்த ஆண்டு குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கியது. அதன்பின்பு ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.