வீட்டு கடன் வாங்க இவையெல்லாம் தேவை…

First Published Jan 8, 2017, 9:43 AM IST
Highlights


1. மனைப் பத்திரம்:

உங்களோட மனையை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வாங்கிய பத்திரம்.

2. தாய்ப் பத்திரம்:

இப்போ இருப்பதற்கு முந்தைய மனை பத்திரம்.

3. வில்லங்கச் சான்றிதழ்:

இன்னைய நிலைமையில் வீட்டு மனை உங்களுக்குதான் சொந்தம் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இது. சார் பதிவாளர் அலுவலகத்துல விண்ணப்பித்து வாங்க வேண்டும். குறைந்தது 13 வருடம், அதிகபட்சம் 20 வருடத்திற்கு இந்த வில்லங்கச் சான்றிதழை வாங்கி வைப்பது நல்லது.

4. சட்டக் கருத்து (லீகல் ஒப்பீனியன்):

இது வக்கீல்கிட்ட வாங்கவேண்டிய சான்றிதழ். இதை வாங்குறதுக்கு, மனை பத்திரம், ஒரிஜினல் வில்லங்கச் சான்றிதழ், தாய்பத்திரத்தோட ஜெராக்ஸ், அப்ரூவ்டு மனையா இருந்தா அதுக்கான லே-அவுட் வரைபடம்.. எல்லாத்தையும் கொடுக்கணும்.

5. மனை விலை மதிப்பீடு அறிக்கை:

நீங்கள் வீடு கட்டப்போகிற மனையின் சந்தை மதிப்பு என்ன? அரசு வழிகாட்டி மதிப்பு எவ்வளவு?, இந்த இரண்டின் சராசரி என்ன? இதையெல்லாம் கணக்கிட்டு அங்கீகாரம் பெற்ற பொறியாளார் ஒருவர் கொடுக்கும் அறிக்கைதான் இது.

6. அங்கீகரிக்கப்பட்ட திட்டம்:

மாநகராட்சி / நகராட்சி மாதிரியான உள்ளாட்சி அமைப்பிடம் வாங்க வேண்டிய கட்டட திட்டம். கடன் வாங்கி வீடு கட்டுவதாக இருந்தால் முதலிலேயே திட்டம் போட்டு, உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதிக்கு விண்ணப்பித்து, சீக்கிரம் வீட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.

7. கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு:

புதிதாக வீடு கட்டுவதாக இருந்தால் அதற்கான செலவு விவரங்கள் பற்ற்றி விவரமாக பொறியாளார் தரும் அறிக்கை. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடென்றால், அதை மதிப்பிட்டு பொறியாளர் தரும் அறிக்கை.

8. வயதுக்கான ஆதாரம்:

கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை முடிவு செய்வதற்கு வயசு ரொம்ப முக்கியம். 10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்புச் சான்றிதழ் அல்லது டி.சி-யே போதும். பொதுவா 21 வயது நிரம்பியவர்கள்தான் வீட்டுக்கடன் வாங்க முடியும். சில வங்கிகள் இதை 25 என்றும் நிர்ணயித்து இருக்கிறார்கள். வீட்டுக்கடன் வாங்க அதிகபட்ச வயசு 55.

9. வருமானச் சான்றிதழ்:

நீங்க வேலை பார்க்கும் அலுவலகத்தின் லெட்டர் பேடில், உங்கள் சம்பள விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு வழங்கப்படும் சான்றிதழ். பொதுவாக, ஒரு நிறுவனத்துல மூணு வருடத்திற்கு மேல் நிரந்தரப் பணியில இருப்பவர்களுக்குத்தான் வீட்டுக் கடன் கிடைக்கும்.

10. வங்கி பாஸ்புக்:

கடந்த ஆறு மாத காலத்திற்கான வங்கி பாஸ்புக்கின் நகல்.

11. வருமான வரி செலுத்திய விவரம்:

வருமான வரித் துறை வழங்கும் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையின் நகல், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தோட நகலையும் கொடுக்க வேண்டும். சுயதொழில் செய்பவர்கள் இதை அவசியம் கொடுக்கணும்.

12. இருப்பிட முகவரிக்கான ஆதாரம்:

குடும்ப அட்டை / வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்.

13. புகைப்படம்:

மார்பளவு புகைப்படங்கள் 3-4 தேவைப்படும்.

இவற்றைத் தவிர, தேவைப்பட்டால் கடனுக்கு ஜாமீன் கொடுக்க கேரன்டி கையெழுத்து போடச் சொல்வார்கள். வருமான வரி கட்டும் யாரும் இந்த கேரன்டி கையெழுத்துப் போடலாம். தேசிய சேமிப்பு பத்திரம், ஆயுள் காப்பீடு பத்திரம் இதையும் ஜாமீன் தொகைக்கு இணையாக கொடுக்கலாம்.

கடனுக்கு அடமானமாக சொத்து பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள். கூடவே, சொத்து வங்கியில் அடமானமாக இருக்கும் விவரத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவார்கள். அடமானம் வைத்த சொத்தை கடனை அடைப்பதற்கு முன்னாடியே விற்க முடியாது.

click me!