தமிழகத்தில் மே 2-க்குப் பிறகு முழு ஊரடங்கு இருக்குமா..? உ.பி.களுக்கு மு.க.ஸ்டாலின் சொன்ன மெசேஜ்..!

By Asianet TamilFirst Published Apr 23, 2021, 9:36 PM IST
Highlights

தமிழகத்தில் மே 2-க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கொரோனா இரண்டாவது அலை உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதிலும், இந்தியாவில் அதன் தாக்கம் வேகமாகவும் கோரமாகவும் இருக்கிறது. ஒரு நாளில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்குப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. நோய்த் தொற்றால் மரணமடைகிறவர்களின் எண்ணிக்கை கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அயராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் சேவை போற்றுதலுக்குரியது. அவர்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்குப் போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மராட்டிய மாநிலத்தின் நாசிக் முதல் தமிழ்நாட்டின் வேலூர் வரை பலர் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சைப் பிளக்கிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களிலும் உயிரிழப்புகள் தொடர்கின்றன. மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு என்றால் மக்கள் நல்வாழ்வுத்துறையை எத்தகைய கட்டமைப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு முன்னுதாரணமாகவும், தொலைநோக்குடனும் செயலாற்றியிருப்பதை இந்த கொரோனா காலத்தில் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பதற்கான தடுப்பூசிகள் மே 1-ஆம் தேதி முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தடுப்பூசி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை முதல் தவணை ஊசி போடச் சென்றவர்களும், இரண்டாவது தவணை ஊசிக்கான காலக்கெடு நெருங்கியவர்களும் வேதனையோடு குறிப்பிடுவதை ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் காண முடிகிறது.
அனைவருக்கும் தடுப்பூசி என்றும், மருந்துகளை மாநில அரசுகளே நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்த நிலையில், தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையைக் கடுமையாக உயர்த்தியிருப்பது மாநிலங்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பெரும் சுமையாகும். இந்தச் சுமை, மக்களைத்தான் பாதிக்கும். பேரிடர் நேரத்தில், மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான முடிவுகளை எடுத்து உதவிக்கரம் நீட்டுவதே ஆட்சியாளர்களின் கடமை. அதற்கு மாறாக, தடுப்பூசி தட்டுப்பாடு - விலையேற்றம் - கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் ஊசிமருந்து பற்றாக்குறை எனச் செய்திகள் வருவது மக்களுக்கு அவநம்பிக்கையையே ஏற்படுத்தும். அவர்களின் அச்ச உணர்வை அதிகரிக்கச் செய்யும். தேவையற்ற பதற்றம், நோயைவிட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.


இவற்றையெல்லாம் உணர்ந்து மத்திய ஆட்சியாளர்களும், மாநில அரசின் நிர்வாகத்தைக் கவனிப்பவர்களும் போர்க்கால அடிப்படையில் செயலாற்ற வேண்டிய நேரம் இது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் - ஆட்சிக்கு வரும் காலம் கனிந்திருக்கின்ற போதும், மக்கள் நலனே முதன்மையானது எனச் செயல்படும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் பேரிடர் காலத்திலும் களமிறங்கிப் பணியாற்றி வருகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட உங்களில் ஒருவனான நான், அதுகுறித்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மருத்துவர்களின் உரிய ஆலோசனைகளுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன். அதுபோலவே, மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கழகம் முன்னின்று மேற்கொண்டு வருகிறது.
முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை. தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினைப் பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். அதனால், இந்த இரண்டாவது அலைத் தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் கழகத்தினரும் அவற்றுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மே 2-க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்.” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

click me!