இன்று மதியம் 1 மணிக்கு எடப்பாடி ஆட்சி கலையுமா? நீடிக்குமா?

First Published Jun 14, 2018, 10:32 AM IST
Highlights
Will the Edappadi palanisamy regime be dumped at 1 pm today


முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர் அ.தி.மு.க வட்டாரத்தில் நடந்த களேபரங்களுக்கு பிறகும் தினகரனின் பக்கம் 18 எம்.எல்.ஏ’க்கள் சென்றனர். இவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது பழனிசாமி அரசு. இந்த உத்தரவு செல்லுமா?

அந்த 18 எம்.எல்.ஏ’க்களை இப்போது வரையிலும் தன் பக்கம் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் தினகரன். இதனிடையே இந்த 18 பேர் மீதான தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று (ஜூன் 14) மதியம் 1 மணிக்கு வெளியாகும் என நீதிமன்ற வட்டாரத்தில் சொல்லப்பட்டது.

வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, ஏழுமலை என 18 எம்.எல்.ஏ’க்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களின் ஆதரவு இல்லையென்றும், அவரை தவிர வேறு நபர் முதலமைச்சர் பதவிக்கு வந்தால் ஏற்கவும் தயார்’ எனவும் தனிதனியே ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர்.

அந்நேரத்தில் சுதாரித்துகொண்ட எடப்பாடி பழனிசாமி அரசு இவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ’க்களை கடந்த செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைகளின் போதுதான் கூவத்தூர் போலவே இப்போது இந்த 18 எம்.எல்.ஏ’க்களும் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளதாக சமூக வலைதளங்களில் நய்யாண்டிகள் கிளம்பியது.

தகுதி நீக்க நடவடிக்கைக்கு பிறகு தினகரன் தரப்பில் இருந்து 18 எம்.எல்.ஏ’க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று (ஜூன் 14) மதியம் 1 மணிக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பு தினகரன் தரப்புக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள். எடப்பாடி பழனிசாமி அரசு தன்னை தக்கவைத்து கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!