இந்த வருடமும் சித்திரை திருவிழா நடக்காதா..? மதுரையை கொந்தளிக்க வைக்கும் இந்து முன்னணி..!

By Thiraviaraj RMFirst Published Apr 13, 2021, 9:22 AM IST
Highlights

எத்தனை தடை போட்டாலும், இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான மதுரை சித்திரை திருவிழா நடந்தே தீரும்.

"எத்தனை தடை போட்டாலும் சித்திரை திருவிழா நடந்தே தீரும்... என மதுரையில் இந்து முன்னணி ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பினர் சர்ச்சைக்குரிய வகையிலான போஸ்டர்களை மதுரை மாநகர முழுவதும் ஒட்டியுள்ளனர். மதுரையில் சித்திரை திருவிழா நடத்த விடாமல் தடுக்கும் தமிழக அரசை கண்டிப்பதாகவும், எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடந்தே தீரும் என்ற வாசகங்களுடன் மதுரை மாநகரில் இந்து முன்னணி அமைப்பினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொரோனா பாதிப்பின் காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் யாருக்கும் அனுமதியின்றி, கோவில் வளாகத்திற்கு உள்ளேயே விழாக்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டாவது கொரோனா பரவல் குறைந்து சித்திரை திருவிழா வழக்கம் போல விமரிசையாக நடத்தப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தேர்தல் பரப்புரை உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மிக தீவிரமாகி வருகிறது.

இதன் காரணமாக, ஏப்ரல் 15 முதல் 30 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடத்தப்படும் என அரசும், கோவில் நிர்வாகமும் அறிவித்து உள்ளன. எனவே, ஆன்லைன் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் பக்தர்கள் தரிசித்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி வரும் நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் சர்ச்சைக்குரிய வகையிலான போஸ்டர்களை மதுரை மாநகர முழுவதும் ஒட்டியுள்ளனர்.

அதில், "தமிழக அரசே சித்திரை திருவிழாவை நடத்திடு, கொரோனவை ஓட்டிடு... ; மதுரை சித்திரை திருவிழாவை நடத்த விடாமல் தடுக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்... ; எத்தனை தடை போட்டாலும், இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான மதுரை சித்திரை திருவிழா நடந்தே தீரும்..." என்ற வாசகங்கள் இடம்பெற்று உள்ளன.

click me!