ஸ்டான்லி அரசு மருத்துவரை இடம் மாற்றியது ஏன்..? விஜயபாஸ்கருக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

By Asianet TamilFirst Published Mar 25, 2020, 8:06 PM IST
Highlights

ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தால்தான் கொரோனா நோயை உறுதியுடன் தடுக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரசின் 'தனிமைப்படுத்துதல்' முயற்சி வெற்றி பெற - அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் குறைந்த பட்சம் ரூபாய் 5000 நிதியுதவி வழங்கிட வேண்டும் என்றும் - அதை அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேராக அனுப்பிட வேண்டும்.
 

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய சீனியர் ரெசிடன்ட் டாக்டர் ஜி.சந்திரசேகரை அவசர அவசரமாகத் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றியதன் மர்மம் என்ன என்று புரியவில்லை. அதற்கான காரணத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொடிய கொரோனா நோயைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்- நோய்த்தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் முகக்கவசங்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கு - அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் உடனே கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அதிமுக அரசைப் பொறுத்தவரை, 'குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் 1000 ரூபாய்', 'கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டும் 1000 ரூபாய்' என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது. கொரோனா பாதிப்பால் மக்கள் சந்திக்கும் இன்னல்களையும், அவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்னைகளையும் சரியான முறையில் இந்த அரசு அணுகவில்லை. 'அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்குமே நிவாரணமும், நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும்' என்ற நிலையில், பிற மாநிலங்களிலிருந்து வந்து இங்கு பணிபுரியும் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி உண்டா என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை.

 
சிறு வியாபாரிகள் அனைவருமே பதிவு செய்திருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே, பூ விற்பவர்களிலிருந்து அனைத்து நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகளுக்கு (பதிவு செய்யப்பட்டவர்கள், பதிவு செய்யாதவர்கள் என்று பாரபட்சம் காட்டாமல்) இந்த நிவாரணமும், நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும் என்றாலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1000 ரூபாய் தவிர்த்து, 'பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு மட்டும் மேலும் 1000 ரூபாய் நிதியுதவி' என்ற அறிவிப்பு போதுமானதாக இல்லை. 
ஆகவே முதலில் ஓட்டுநர்கள் (ஆட்டோ, ஓலா, ஊபர் டாக்சி உள்ளிட்ட) அனைவரும் வாங்கியிருக்கும் வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணைப் பணம் வசூலை வங்கிகள் மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகள் வங்கி அதிகாரிகளை அழைத்துப் பேசி அறிவுறுத்த வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் வாங்கிய கடன்கள் மீதான எவ்வித வசூலும் மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ளக் கூடாது.

 
கொரோனா தடுப்பில் உள்ளாட்சி அமைப்புகள் மிக முக்கிய பங்காற்றிட வேண்டியதிருப்பதால் - குறைந்தபட்சம் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிற்கும் உடனடியாக 3 லட்சம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கிட வேண்டும். மேலும், 10, 11-ஆம் வகுப்புத் தேர்வுகள் எழுதியவர்கள் குறித்தும் முடிவு எடுக்கவில்லை. கொரோனா அச்சத்தின் உச்சத்தில் நடத்தப்பட்ட 12-ஆம் வகுப்புத் தேர்வை 34 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. ஆகவே, இந்த இரண்டு விஷயங்களிலும் - பதற்றத்தில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கும், கவலையில் உள்ள பெற்றோர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக நல்ல முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைக்கான அவசர முடிவுகளை எடுக்காமல் - ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய சீனியர் ரெசிடன்ட் டாக்டர் ஜி.சந்திரசேகரை அவசர அவசரமாகத் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றியதன் மர்மம் என்ன என்று புரியவில்லை. அதற்கான காரணத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்க வேண்டும். ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தால்தான் கொரோனா நோயை உறுதியுடன் தடுக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரசின் 'தனிமைப்படுத்துதல்' முயற்சி வெற்றி பெற - அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் குறைந்த பட்சம் ரூபாய் 5000 நிதியுதவி வழங்கிட வேண்டும் என்றும் - அதை அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேராக அனுப்பிட வேண்டும்.
அதேபோல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனா தடுப்பு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், 144 தடையுத்தரவை அமல்படுத்தும் காவல்துறையினர் ஆகியோர்க்கு 5000 ரூபாய் சிறப்பு ஊதியமாக வழங்கிட வேண்டும். கொரோனா நோய்த் தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அ.தி.மு.க அரசு உருவாக்கிட வேண்டும் என்றும், அதற்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள 3,280 கோடி ரூபாய் நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்” என்று அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!