கொடநாடு வழக்கில் விரிவான விசாரணை ஏன்..? சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி விளக்கம்.!

Published : Aug 24, 2021, 10:29 PM IST
கொடநாடு வழக்கில் விரிவான விசாரணை ஏன்..? சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி விளக்கம்.!

சுருக்கம்

கொடநாடு வழக்கில் விரிவான விசாரணை தற்போது ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோயமுத்தூரைச் சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனகராஜ் என்பவரை எனக்கு தெரியும். இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால், எங்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்கும்படி பல தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருகின்றன. அரசுத்தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடிந்த நிலையில், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளின் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. நீதிமன்றத்தின் அனுமதியே இல்லாமல் மேல் விசாரணை நடத்துகிறார்கள். இந்த வழக்கை விரைந்து முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும். மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம், “சாட்சியங்கள் யாரிடமும் எதுவும் தெரிவிக்காமல், குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் மட்டுமே தெரிவித்து, வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதாக” வாதிட்டார். மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து,குற்ற வழக்கின் விசாரணை தொடங்கிய பிறகு குற்றவாளியிடம் மறு விசாரணை நடத்த முடியாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி சயானிடம் காவல்துறை மறு விசாரணை மேற்கொள்கிறார்கள். அனுமதி பெற்று மறுவிசாரணை நடப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் தவறான தகவலை அளித்துள்ளதார்” என்று வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ஒரு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். அந்த  நோக்கத்தில் விசாரணையை விரிவுபடுத்த நீலகிரி நீதிமன்றத்தில் காவல்துறை மெமோ தாக்கல் செய்தது. அது நிராகரிக்கபடவில்லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் என்று நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.” என்று வாதிட்டார். 
 காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா, “மனுதாரரின் குற்றச்சாட்டுகள் அனுமானம்தான். மனுதாரர் அனுபவ் ரவி காவல்துறையின் சாட்சியம் மட்டுமல்ல, வழக்கில் தொடர்புடையவர்களுடன் நெருக்கமானவர். இந்த வழக்கில் காவல்துறை விரிவாக விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. அந்த அறிக்கையைப் பொறுத்து நீதிமன்றம்தான் முடிவெடுக்கப்போகிறது. வழக்கில் சில மரணம், விபத்து குறித்து முந்தைய ஆட்சியில் முறையாக விசாரிக்கவில்லை. இவை அனைத்தும் தற்போது முழுமையாக விசாரிக்கப்படுகிறது. கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளரை இதுவரை விசாரிக்கவில்லை.” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “விசாரணையை விரிவுபடுத்திக்கொண்டே போனால் எப்போதுதான் நீலகிரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கம் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “இந்த வழக்கில் தேவையில்லாமல் யாரையும் துன்புறுத்த வேண்டும் என்பது நோக்கம் அல்ல. விரிவான விசாரணையை முடிக்க 8 வார கால அவகாசம் தேவை” என்று தெரிவித்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 27-க்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

PREV
click me!

Recommended Stories

ரஜினியை மிரட்டிய திமுக.. புது குண்டை தூக்கிப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
TVK Vijay: விஜய் செய்யப்போகும் மாயாஜாலம்.! வாக்கு அறுவடைக்கு தயாராகும் 'பெண்கள் படை'!