அதை தமிழகம் எதிர்க்க காரணம் இதுதான்..!! மத்திய அமைச்சருக்கு விளக்கிய மருத்துவர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 2, 2019, 7:10 PM IST
Highlights

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக மாற்றினால், அது குழப்பங்களை உருவாக்குவதோடு, ஒரு தகுதிகாண் தேர்வின் நோக்கத்தையும், போட்டித் தேர்வுக்கான நோக்கத்தையுமே சிதைத்துவிடும். 

நீட் தேர்வைப்போலவே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள நெக்ஸ்ட் தேர்வையும் தமிழகம் கடுமையாக எதிர்கிறது அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.  நெக்ஸ்ட் தேர்வை ஏன் கொண்வரக்கூடாது அதை கொண்டுவந்தால் மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் உள்ளிட்ட மருத்துவர்கள் விளக்கியுள்ளார். அதன் விவரம் :-  

நெக்ஸ்ட் தேர்வை பன்னோக்குடன் மத்திய அரசு கொண்டுவர முயல்கிறது. இறுதி ஆண்டு மருத்துவப் படிப்புக்கான தகுதிகாண் தேர்வாகவும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாகவும், வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கான தகுதித்தேர்வாகவும் நெக்ஸ்ட் தேர்வை மாற்றிட மத்திய அரசு முயல்கிறது. இது பல்வேறு குழப்பங்களையும், ஊழலையும், முறைகேடுகளையும் உருவாக்கும். என்பதுடன்  நெக்ஸ்ட் அவசியமில்லை.  ஏன் என்றால், அனைத்து மருத்துவ மாணவர்களும், இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தான் படிக்கிறார்கள். மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களின் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று, பயிற்சி மருத்துவத்தையும் முடித்த பிறகு தான் ,மருத்துவர்களாக பதிவு செய்து கொண்டு, தொழில் செய்கின்றனர். இந்நிலையில் ,இறுதியாண்டு மருத்துவப் படிப்பில் கொண்டு வரப்படும். 

இந்த நெக்ஸ்ட் தேர்வு அவசியமற்றது எனக் கருதுகிறோம். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான போட்டித் தேர்வாக இது மாற்றப்படுவதால், மருத்துவர்களின் தரத்தை இது பாதிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், முதலாம் ஆண்டு முதலே, ஒரு முதுநிலை இடத்தைப் பெற வேண்டும் என்ற நோக்குடன் மட்டுமே, இந்த நெக்ஸ்ட் தேர்வுக்காக படிக்கத் தொடங்கி,பயிற்சி மையங்களுக்கும் செல்லத் தொடங்கி,நோயாளிகளை பார்ப்பதில் கவனம் செலுத்தவில்லை எனில், மருத்துவ மாணவர்களின் மருத்துவ ரீதியான கிளினிக்கல் அனுபவம்,அறிவு ,திறமை பாதிக்கப்படும். பரந்து பட்ட வாசிப்பையும்,பரந்து பட்ட அறிவை,திறமையை வளர்த்துக் கொள்ளாமல் போய்விடுவர். இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பை, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக மாற்றினால், அது குழப்பங்களை உருவாக்குவதோடு, ஒரு தகுதிகாண் தேர்வின் நோக்கத்தையும், போட்டித் தேர்வுக்கான நோக்கத்தையுமே சிதைத்துவிடும். 

ஒரு போட்டித் தேர்வு என்பது ' அப்ஜக்ட்டிவ் ' டைப்பாக இருக்க வேண்டும். அது விருப்பம் சார்ந்து மதிப்பீடு செய்யும் ' சப்ஜெக்ட்டிவ் தேர்வு முறையாக இருக்கக் கூடாது. சிறுவினா,பெருவினா போன்ற எழுத்துத் தேர்வுகளும், கிளினிக்கல் தேர்வும் இதில் இருந்தால் , ஆசிரியர்கள் விருப்பம் சார்ந்து மதிப்பீடு  செய்யும் முறை இருந்தால் அது பாராபட்சத்திற்கும், முறைகேடுகளுக்குமே வழி வகுக்கும். முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில், மருத்துவக் கல்வியில் உள்ள 20 பாடங்களிலும் இருந்தும் கேள்விகள் இடம் பெற வேண்டும்.இறுதி ஆண்டு மருத்துவத் தேர்வு அப்படியல்ல. அதில் இறுதியாண்டு பாடங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். அத்தேர்வில் கிளினிக்கல் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்றவை இடம் பெற வேண்டும்.இல்லை எனில் ,ஒரு மருத்துவ மாணவரின் திறைமையை முழுமையாக கண்டறிய இயலாது. 

எனவே, இறுதியாண்டு மருத்துவத் தேர்வை ஒரு போட்டித் தேர்வாக (நெக்ஸ்ட் தேர்வாக) மாற்றக்கூடாது. தற்பொழுது நடைமுறையில் உள்ள முறையே தொடர வேண்டும்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசும்,மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கு  மாநில அரசும், நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். என அவர் வலியுறுத்தியுள்ளார். 

click me!