சூர்யா அப்படி என்ன தவறாக பேசிவிட்டார்...!! வரிந்துகட்டி வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2020, 4:21 PM IST
Highlights

நீட் தேர்வு குறித்து பிரபல நடிகர் சூர்யா தெரிவித்திருப்பது மாணவர்கள் பெற்றோர்கள் கருத்தின் பிரதிபலிப்பே, மேலும் நீதிமன்றம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து உள்நோக்கம் கொண்டது அல்ல. அவமதிப்பும் அல்ல.

நீட் தேர்வு குறித்து பிரபல நடிகர் சூர்யா தெரிவித்திருப்பது மாணவர்கள் பெற்றோர்கள் கருத்தின் பிரதிபலிப்பே, மேலும் நீதிமன்றம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து உள்நோக்கம் கொண்டது அல்ல. அவமதிப்பும் அல்ல. எனவே மாண்பமை நீதிபதி தன் முடிவை சுய பரிசோதனை செய்வது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-  நீட் தேர்வின் கொடுமையால் எத்தனையோ மாணவ மாணவிகளின் உயிர்  பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், மனிதாபிமானமும், சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதை எதிரொலிக்கிறார்கள்.  பிரபல நடிகர் சூர்யா அவர்கள் தொடக்கத்திலிருந்தே நீட்தேர்வு பற்றியும் தேசிய கல்வி கொள்கை பற்றியும் தனது கருத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்துக்கள் பல லட்சக்கணக்கான பெற்றோர்கள், மாணவர்கள், இளைஞர்களின் கருத்து என்ற நிலையில் தெளிவாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

அது மக்கள் கருத்தின் ஒலி முழக்கம் தான். இந்த கொரோனா கொடும் தொற்று காலத்தில் கூட மற்ற தேர்வுகள் எல்லாம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நீட் தேர்வில் மட்டும் மத்திய அரசு இப்படி பிடிவாதம் பிடிப்பது ஏன் என்ற கேள்வியும், அதன் விளைவாக மாணவச் செல்வங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை விளக்கவே சூர்ய அவர்கள் கொடுத்த அறிக்கையில், காணொளி மூலம் கூட நீட் தேர்வு எழுத அனுமதிக் கப்படாமல் நேரில் வந்து தான் எழுதியாக வேண்டும் என்பது நியாயம் தானா என்பதை வலியுறுத்தவே நீதிமன்றங்கள் கூட காணொளி மூலம் நடைபெறும் நிலையில் இதற்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அழுத்தம் தர வேண்டும் என்றுதான் கேட்கிறார் நண்பர் சூர்யா ஒப்பீடு செய்து காட்டினார். அவ்வளவே. ஆக அது எவ்வகையிலும் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. நாட்டின் நடப்பை ஒப்பிட்டு காட்டியுள்ளார். அது ஒரு தகவல் அவ்வளவுதான். அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்ற செய்தி நாட்டில் கருத்து சுதந்திரத்தை தவறாக எடுத்துக் கொண்ட அல்லது புரிந்து கொண்ட ஒரு நிலைப்பாடாகும். 

கருத்து சுதந்திரத்தை தாராளமாக பாதுகாக்க வேண்டியது அரசமைப்புச் சட்டத்தின்படி பிரமாணம் எடுத்து கடமையாற்றும் நீதிபதிகளின் கடமை என்பதால் அவர்கள் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது எந்த அளவுக்கு சரியானது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். எந்த உள் நோக்கமும் அதில் இல்லை, நீதிமன்றங்களின் மதிப்பை அது எவ்வகையிலும் குறைக்கும் அறிக்கை யாகவும் இல்லை. எனவே இதுபோன்ற ஒரு புகார் மனு செய்வது இந்த காலகட்டத்தில் அதுவும் உயர் நீதிமன்றத்தில் பிரசாத் பூஷன் வழக்கு, தீர்ப்பு, மேல்முறையீடு, மறுசீராய்வு என்று ஒருபுறத்தில் நடந்து நாட்டின் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட வல்லுனர்களும் பல கருத்துக்களை எது விமர்சனம், எது அவமதிப்பு என்பதை நன்கு விளக்கி தெரிவித்துள்ள நிலையில், இப்படி ஒரு விவாதத்திற்குரிய பிரச்சினையை மாண்பமை நீதிபதி ஒருவர் எழுப்பியது மிகவும் வருந்த கூடிய ஒன்று என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!