தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திவாகரன் ஆதரவு!

By sathish kFirst Published Dec 2, 2018, 6:03 PM IST
Highlights

தி.மு.க சார்பில் திருச்சியில் 4-ந் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திவாகரன் ஆதரவு தெரிவித்துள்ளார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

கஜா புயலை வைத்து சிலர் தங்களின் உள் பகையை தீர்த்து கொள்கின்றனர். அரசியல் வாதிகள் சிலர் பேட்டிகள் மூலமும், அறிக்கைகளை வெளியிட்டும் மக்களை பீதி அடைய செய்கின்றனர். சிலர் ஓட்டு கேட்க வருவது போல் வேனை விட்டு கீழே இறங்காமல் புயல் பாதித்த மக்களை சந்தித்து செல்கின்றனர் என தினகரனை மறைமுகமாக குத்திக்காட்டினார் திவாகரன்.

தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக அரசின் மேகதாது அணை கட்ட வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய செயல், புயலால் பாதித்த டெல்டா மக்கள் மீது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயல் என்றார்.

இதனையடுத்து, மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து வருகிற 4–ந் தேதி திருச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும் பாகுபாடுகளை மறந்து பங்கேற்க வேண்டும். இதில் எங்கள் கட்சியின் சார்பில் தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றார்.

மேலும், புயல் பாதிப்பிலிருந்து மக்கள் முழுமையாக மீண்டு வர இன்னும் 20 நாட்கள் ஆகும். முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்றும் செயல் கொடுஞ் செயல் ஆகும். தமிழக அரசின் புயலுக்கு முந்தைய பணிகளும் தற்போது நடைபெற்று வரும் நிவாரண பணிகளும் பாராட்டுதலுக்குரியது என இவ்வாறு அவர் கூறினார்.

click me!