திரும்ப திரும்ப தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள்... பெட்டிகளை மாற்ற சதி என இளங்கோவன் காட்டம்!

By Asianet TamilFirst Published May 16, 2019, 6:50 AM IST
Highlights

ஏற்கனவே கோவையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்குக் கொண்டுசெல்லப்பட்டன. யாருக்கும் சொல்லாமல் ஏன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படுகின்றன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. 

திருவள்ளூரிலிருந்து தேனிக்கு 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதற்கு தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தேனி  தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மே 19 அன்று மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக திருவள்ளூரிலிருந்து 20 வாக்குப்பதி இயந்திரங்களும் 30 விவிபாட் இயந்திரங்களும் தேனிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதைக் கேள்விபட்டவுடனே எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

 
ஏற்கனவே கோவையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்குக் கொண்டுசெல்லப்பட்டன. யாருக்கும் சொல்லாமல் ஏன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படுகின்றன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனால், இது வழக்கமான நடைமுறைதான் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதை ஏற்காத எதிர்க்கட்சிகள், ‘தமிழக தேர்தல் ஆணையரை மாற்றிவிட்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்தன.


இந்நிலையில் திருவள்ளூரிலிருந்து கோவைக்கு வாக்குப்பதி இயந்திரங்கள் எடுத்துச் செல்வது சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, “ஏற்கனவே கோவையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு அனுப்பினார்கள். சதி வேலை செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுவதாக சந்தேகம் எழுகிறது. எத்தனை பெட்டிகளை மாற்றினாலும் பன்னீர்செல்வம் மகன் தோல்வியைத் தழுவுவார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.


 இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம். ஒழுங்காக தேர்தல் நடந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால், மோடியோடு ஓபிஎஸ் பேசி இதுபோன்ற வேலைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனும் தேர்தல் இயந்திரங்கள் மாற்றப்படுவதற்கு சந்தேகம் தெரிவித்துள்ளார்.

click me!