தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்க்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற ஆசை சிலகாலமாகவே இருந்து வருகிறது. இருப்பினும் நடிகர் விஜய் இதுவரை நேரடி அரசியலில் களமிறங்கவில்லை. சரியான நேரத்தில் அரசியலுக்கு வர காத்திருக்கிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, விஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது எல்லாம் வருங்கால முதல்வரே என்கிற வாசகத்தை மறக்காமல் வைத்துவிடுகிறார்கள் ரசிகர்கள்.
மேலும், விஜய்யை முதல்வராக்கிப் பார்க்க அவரின் ரசிகர்கள் ஆசைப்படுவதில் தவறு எதுவும் இல்லை என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிலர் வெற்றி பெற்றுள்ளனர். இது விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆரம்பமாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு 169 பேர் போட்டியிட்டனர்.
இவர்களில் 13 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 102 பேர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மொத்தம் 169 பேர் போட்டியிட்டதில் 115 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியது. மொத்தம் 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கூறப்பட்டது.இந்த வெற்றி மற்ற கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி நடிகர் விஜய் தனியாக கட்சி ஆரம்பித்தால் அது ஒருவேளை திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு மாற்றாக இருக்கம் அளவுக்கு வளர்ந்துவிட வாய்ப்பு இருக்குமோ ? என்ற கேள்வியும் எழுந்தது.தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மற்ற கட்சிகளை போல் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை போல கணிசமாக வெற்றி பெறுவார்களா ? அல்லது தோல்வி அடைவார்களா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.