சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்கு..!! தனி நீதிமன்றம் அமைக்க ஸ்மிருதி இரானிக்கு கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 13, 2019, 4:15 PM IST
Highlights

மாவட்டத்தில் நிலுவையிலுள்ள போக்ஸோ வழக்குகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இணை கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடத்தப்பட்டது. 

போக்ஸோ ( POCSO) வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை  அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கடிதம் வழங்கியுள்ளார் . இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ரவிக்குமார் வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதன் விவரம் :-

  

“விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள போக்ஸோ வழக்குகளின் நிலவரம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டுமென்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்ட  கடிதத்தின் அடிப்படையில் கடந்த  நவம்பர் 5ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள போக்ஸோ வழக்குகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இணை கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் பின்வரும் விபரங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்:  2013-ம் ஆண்டிலிருந்து 31.10.2019 வரை விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்குகளில் 7 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.  163 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன;  278 வழக்குகள் விசாரணையில் உள்ளன;  26 வழக்குகள் இன்னும் கோப்பில் எடுத்துக்கொள்ளப்படவில்லை;  10 வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. 

போக்ஸோ வழக்குகளை விசாரிப்பதற்கெனத் தனியே நீதிமன்றம் எதுவும் விழுப்புரம் மாவட்டத்தில் இல்லை. அந்த வழக்குகள் மகிளா நீதிமன்றத்திலேயே நடத்தப்படுகின்றன. இது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும். வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டிய நிதி வழங்கப்பட்டதும்கூட திருப்திகரமாக இல்லை. எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழ்நாடு மாநில அரசுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என அந்த கடிதத்தில் ரவிக்குமார் எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

click me!