கேரளாவை மிரட்டிய வனிதா மதில் !! 50 லட்சம் பெண்கள் பங்கேற்ற 620 கிலோமீட்டர் பிரமாண்ட மனித சங்கிலி !!

By Selvanayagam PFirst Published Jan 2, 2019, 8:46 AM IST
Highlights

மதவாத மற்றும் சாதிய சக்திகளுக்கு எதிராக கேரளாவில் 50 லட்சம் பெண்கள் பங்கேற்ற வனிதா மதில் என்ற மனித சங்கிலி நடைபெற்றது. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் நடைபெற்ற இந்த பெண்கள் மனித சங்கிலியை கேரள முதலமைச்சர் பினராயி  விஜயன் தொடங்கி வைத்தார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சபரி மலை போராட்டக் களமாக காட்சியளிக்கிறது.

அங்கு பெண்களை நுழைய விடாமல் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் பெண்களைத் திரட்டி  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இடது சாரிகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் பெண்கள் பங்கேற்கும் வனிதா மதில் என்ற  மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

இதில்  மதவாத, சாதிய சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் மதில்  அமைத்து புத்தாண்டின் முதல் நாளில் வரலாறு படைத்துள்ளனர்.கேரளாவை ஊடுருவிச் செல்லும் கன்னியாகுமரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அணி திரண்ட பெண்கள் கேரளத்தின் மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி ஒற்றை வரிசையிலும் பல வரிசையிலுமாக பெண்கள் தோளோடு தோள் சேர்த்து பெண் சுவரை பெரும்மதிலாக மாற்றினர். நேற்று  மாலை 3.45 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் பெண்கள் அணி அணியாக வந்து ஒருவர் தொட்டு ஒருவராக இடைவெளி இல்லாமல் நிரம்பி நின்றனர்.

சரியாக 4 மணிக்கு கைகளை முன்னோக்கி நீட்டி பெண்களின் சமவாய்ப்பு, மறுமலர்ச்சிப் பாரம் பரியத்தை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை அனைவரும் உரக்க ஒலித்தனர்.

4.15 வரை சுவரும் உறுதிமொழி ஏற்பும் நடந்தது. திருவனந்தபுரம் வெள்ளி யம்பலத்தில் உள்ள மகாத்மா அய்யன்காளி சிலைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மாலை அணிவித்து வனிதா மதில் சுவரை தொடங்கி வைத்தார்.

காசர்கோடில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா பெண் சுவரின் முதல் நபராகவும், திருவனந்தபுரத்தில் பிருந்தாகாரத் கடைசி நபராகவும் தோள் சேர்த்தனர். கொச்சி யில் சுவாமி அக்னிவேஷ் பார்வையாள ராக பங்கேற்று வாழ்த்து தெரி வித்தார். திருவனந்தபுரத்தில் பெண்சுவர் நிறைவு பெற்றதும் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத், ஆனிராஜா உள்ளிட்ட மகளிர் அமைப்புகளின் தலைவர்கள் பேசினர். இதில் கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன், முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன், மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெண்களின் வலிமையை உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்வாக ‘மகளிர் மதில்’ அமைந்தது. இந்த பிரம்மாண்ட மதிலின் பகுதி யாக பல்வேறு இடங்களில் முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இடம்பெற்றி ருந்தனர்.

நடிகைகள்  ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களும், எழுத்தாளர்களும் இணைந்து நின்றனர்.பெண்சுவரை வாழ்த்தும் விதமாக அனைத்து இடங்களிலும் ஆண்கள் பெருஞ்சுவர் போல் சாலையின் மறுபக்கத்தில் நின்றனர்.

click me!