ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மென்னியை நெரித்த வைகோ: உச்ச நீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2020, 4:30 PM IST
Highlights

ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் வைகோ அவர்கள் தன்னுடைய கருத்தை கேட்காமல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் செய்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் உடல் ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று கூறி மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆரம்ப முதல் இந்நாள் வரை ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்துகொண்டிருக்கிறார். 

இந்த ஆலைக்கு எதிராக சுமார் கால் நூற்றாண்டாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை வைகோ தலைமை தாங்கி நடத்தியுள்ளார், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் பசுமை தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களிலும், வைகோ அவர்களே நேரில் ஆஜராகி வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் வைகோ அவர்கள் தன்னுடைய கருத்தை கேட்காமல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்து அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் எல்லா வழக்குகளிலும் வைகோ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 
 

click me!