
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் அரசியலில் வரவிருக்கும் நிலையில் இப்போது உதயநிதியும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். கருணாநிதி குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறை வாரிசு களமிறங்குவதால் நிர்வாகிகளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் ஸ்டாலின் மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் முதலில் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.
அதன் பிறகு நடிகராக அவதாரமெடுத்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் நடிகராகி பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி பிறந்த நாளின் போது பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தனது தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். இப்போராட்டத்தின்போது உதயநிதி முன்னிலைபடுத்தப்பட்டார். அப்போதே அவர் அரசியலுக்கு வருவார் என பரவலாக பேசப்பட்டது.
வரும் சட்டசபைத் தேர்தலில் இருந்து நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். அதற்கு முன் தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றத்துக்கு ஆதரவாக புதிய அமைப்புகளை தொடங்கி வருகிறார். இதற்கு முன்பு கடந்த தேர்தலில் உதயநிதியின் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இனிவரும் சட்டசபை தேர்தலில் உதயநிதியும் ஏதாவது ஒரு தொகுதியில் களமிறங்குவார் என தெரிகிறது.
மேலும், சினிமாவில் நடிப்பதற்கு முன்பிருந்தே அரசியலில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள உதயநிதி, தாத்தா, அப்பா என திமுகவில் முக்கிய தலைவர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதாக கூறிய அவர் தனது திரைப்படத்திற்கு வரி விலக்கு மறுக்கப்பட்டபோதே தான் அரசியலுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.